செய்யாறு அருகே பட்டப்பகலில் துணிகரம் : கட்டிட மேஸ்திரி வீட்டில் 25 சவரன், ₹1.50 லட்சம் திருட்டு

செய்யாறு, செப்.7: செய்யாறு அருகே கட்டிட மேஸ்திரி வீட்டில் பட்டப்பகலில் 25 சவரன் நகை, ₹1.50 லட்சம் பணத்தை திருடிச்சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த வெம்பாக்கம் தாலுகா பல்லாவரம் கிராமம் கங்கையம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் துலுக்கானம்(47), கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி அம்சா. இவர்களுக்கு 2 மகள்கள், 1 மகன் உள்ளனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் காலை துலுக்கானம் வீட்டை பூட்டிவிட்டு தனது குடும்பத்தினருடன் விளைநிலத்தில் நெல் அறுவடை பணிக்கு சென்றுவிட்டார். வேலை முடிந்ததும் மதியம் அனைவரும் வீட்டிற்கு வந்தனர். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பூஜை அறையில் வைத்திருந்த பீரோ உடைக்கப்பட்டு, பொருட்கள் சிதறிக்கிடந்தது. மேலும், பீரோவில் மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த 25 சவரன் தங்க நகைகள், நெல் விற்ற பணம் ₹67 ஆயிரம், வீடு கிரக பிரவேசத்தின்போது அன்பளிப்பாக வந்த மொய்ப்பணம் ₹75 ஆயிரம் ஆகியவற்றை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றது தெரியவந்தது.வழக்கம்போல் சாவி வைக்கும் இடத்தை அறிந்திருந்த மர்ம ஆசாமிகள், அதனை எடுத்து பூட்டை திறந்து உள்ளே நுழைந்து, பீரோவில் இருந்த நகை, பணத்தை சுருட்டிக்கொண்டு வீட்டை பூட்டி சாவியை மீண்டும் அதே இடத்தில் வைத்து சென்றது தெரியவந்தது.இதுகுறித்து துலுக்கானம் தூசி போலீசில் நேற்று புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.பட்டப்பகலில் நடந்துள்ள இந்த திருட்டு சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: