திருஷ்டி பொம்மை விற்கும் தம்பதியின் 8 மாத குழந்தை கடத்தலா?

செங்கம், செப்.6: ஊர், ஊராக சென்று திருஷ்டி பொம்மை விற்கும் தம்பதியின் 8 மாத குழந்தை திடீரென மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.விழுப்புரம் மாவட்டம், மூங்கில்துறைப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி(40). இவரது மனைவி கிருஷ்ணவேணி(35). இவர்களுக்கு 8 மாத ஆண் குழந்தை உள்ளது. கணவன், மனைவி இருவரும் ஊர், ஊராக சென்று திருஷ்டி பொம்மை, கயிறு விற்பனை செய்து வருகின்றனர்.அதன்படி, திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த எறையூர் கிராமத்தில் ஊருக்கு வெளியே சிறிய கொட்டகை அமைத்து கடந்த ஒரு மாதமாக தங்கி உள்ளனர். செங்கம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் திருஷ்டி பொம்மைகளை விற்பனை செய்து வந்தனர்.இந்நிலையில், கடந்த 3ம் தேதி இரவு சுப்பிரமணி, தனது மனைவி மற்றும் குழந்தையுடன் கொட்டகையில் தூங்கிக்கொண்டிருந்தார். விடியற்காலை எழுந்து பார்த்தபோது தூங்கி கொண்டிருந்த குழந்தையை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த இருவரும், பல்வேறு இடங்களில் தேடியும் குழந்தை கிடைக்கவில்லை.இதுகுறித்து, சுப்பிரமணி பாச்சல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பூபதி வழக்குப்பதிந்து மாயமான குழந்தையை மர்ம ஆசாமிகள் கடத்திசென்றார்களா? என விசாரணை நடத்தி வருகிறார்.தாய், தந்தையுடன் தூங்கிக்கொண்டிருந்த குழந்தை மாயமான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: