ஆரணி, செப்.4: ஆரணியில் நேற்று பழ வியாபாரியை தாக்கியதாக டிஎஸ்பியை கண்டித்து வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.ஆரணி காந்திசாலையில் ஏராளமான பூக்கடை, பழக்கடைகள் உள்ளன. போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள சாலையோர கடைகளை அகற்ற போலீசார் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், நேற்று டிஎஸ்பி செந்தில் மற்றும் ஆரணி நகர போலீசார் காந்திசாலையில் உள்ள சாலையோர கடைகளை அப்புறப்படுத்தினர்.அப்போது, ஆரணி காந்திநகரை சேர்ந்த பழவியாபாரி நடராஜன்(85) என்பவருக்கும், டிஎஸ்பிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்ேபாது டிஎஸ்பி, நடராஜனை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனை தட்டிக்கேட்ட நடராஜன் மகன் ஜெயராமனையும் டிஎஸ்பி கடுமையாக பேசினாராம்.
இதனை கண்டித்து சாலையோர வியாபாரிகள், ஆரணி காந்திசாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தாசில்தார் கிருஷ்ணசாமி, தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலமன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வியாபாரிகள், டிஎஸ்பி செந்தில் எங்களை வியாபாரம் செய்யவிடாமல் தொடர்ந்து இடையூறு செய்து வருகிறார் என்றனர்.அதற்கு அதிகாரிகள், டிஎஸ்பி அலுவலத்திற்கு வாருங்கள் பேசி முடிவெடுக்கலாம் என கூறினர். இதையடுத்து, வியாபாரிகள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். டிஎஸ்பி அலுவலகத்திற்கு சென்ற வியாபாரிகளிடம், டிஎஸ்பி செந்தில் சமரசம் பேசி அனுப்பி வைத்தார். இச்சம்பத்தால் அங்கு சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.