ங போல் வளை...

நன்றி குங்குமம் டாக்டர்

யோகம் அறிவோம்!

மேன்மைகள்  யாவையும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்

இந்திய அறிதல் முறைகள் அனைத்தும், மற்ற மரபுகளுடன் உரையாடி அவற்றிலிருந்து தனக்கான நன்மை பயக்கக்கூடிய ஒன்றை, உள்ளிழுத்து மேலும் பெருகி வளரும் தன்மைகொண்டவை. உதாரணமாக ஒரு தேர்ந்த ஆயுர்வேத ஆசான் அல்லது மருத்துவர் இன்றைய அறிவியலின் அளவுகோல்கள் அனைத்தையும் சேர்த்து கணக்கில் கொண்டுதான் மரபார்ந்த மருத்துவ முறையைத் தேர்ந்தெடுப்பார்.  ‘எம்.ஆர் ஐ ஸ்கேன்’ (MRI-SCAN)  செய்து பார்த்து, முதுகுத் தண்டில்  இருக்கும் அமைப்பை/பிரச்சனையை அறிந்துகொண்டு,  ஒரு தைலமோ, மூலிகை சார்ந்த கஷாயமோ, லேகியமோ கொடுப்பதில் அவருக்கு எந்தத் தயக்கமும் இருக்காது.

இதுவே நன்மை பயக்கும் கருவிகளை நமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் இந்திய ‘உள்ளிழுத்துக்கொள்ளும் முறை’யோக மரபும், வேதகாலம் முதல் இன்று வரை அறிஞர்களால், இத்துறையின் வல்லுநர்களால் இப்படித்தான் பயணித்து வந்திருக்கிறது. இந்த நீண்ட பயணத்தின் காரணமாகவே யோக மரபு  யோகம் என்பதை வெறும் ஆசனங்கள் என்றோ தியானமுறை என்றோ மூச்சு பயிற்சி என்றோ ஒரு எல்லை வகுத்து வைக்காமல், அதன் துணை மரபுகளான ஆயுர்வேதம் மற்றும் தாந்த்ரீகப் பயிற்சிகளையும் தேவையான இடங்களில் இணைத்துக்கொள்கிறது.   

ஒரு மரபார்ந்த யோகக்கல்வி நிலையைக் கற்றுக்கொள்ள வருபவர்களுக்கான பயிற்சிகளை வடிவமைக்கையில், முதலில் அவருடைய வாத பித்த கபம் என்கிற முக்குணங்களை கருத்தில்கொண்டு உடல் சார் பிணிகளை நீக்கும் பயிற்சிகளை வழங்குவார் அதன் ஆசிரியர்.  இந்தக் கருதுகோள் ஆயுர்வேத மரபின் அடிப்படைகளில் முதன்மையானது ஆயுர்வேதத்தின் அனைத்து சிகிச்சை முறைகளும் ‘வாத- பித்த- கப’ அடிப்படைகளில்தான் அமைந்துள்ளது.

ஆக, வாதம் எனும் வாயுவின் தன்மை சமநிலையில் இல்லாத ஒருவருக்கு, வாதத்தைத் தூண்டக்கூடிய அல்லது குறைக்கக்கூடிய பயிற்சிகளை நேரடியாக வழங்காமல், மற்ற இரு தோஷங்களான பித்தம், கபம் எனும் நிலைகளையும் கருத்தில்கொண்டே பயிற்சியை வடிவமைக்க வேண்டியுள்ளது. ஏனெனில், நாம் ஏற்கெனவே சொன்னது போல,  சரியாகத் தேர்ந்தெடுக்கப்படாத யோகப்பயிற்சி நிச்சயமாகப் பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தவல்லது.

இப்படியாக, ஆயுர்வேத மரபிலிருந்து உணவு பழக்கவழக்கம், தினசரி செய்யக்கூடிய ஆரோக்கியச் செயல்பாடுகள் மற்றும் தவிர்க்க வேண்டியவை, போன்ற பல கருத்துக்களை பல நூற்றாண்டுகளாகவே, யோகமரபு இணைத்துக் கொண்டிருக்கிறது. முக்கியமான யோகநூல்கள் அனைத்தும் இதைச் சுட்டிக்காட்டுகிறது. ‘ஹதயோக பிரதீபிகா’ போன்ற முதன்மை நூல் ஒரு  நல்ல உதாரணம்.

யோகப் பயிற்சிகளில் சரி பாதி, மனம்,ஆழ்மனம், உணர்ச்சிகளைச் சரியாக நிர்வகித்தல்,  தியானம்  போன்ற புறக் கண்களால் காணவே முடியாத நமது இருப்புக்கான பயிற்சிகளாகவே அமைந்துள்ளது. குறிப்பாக, பெரும்பாலான தியான முறைகள் ஒரு குறியீட்டுத் தன்மையுடனோ, ஓர் உருவகத்தை அல்லது  யந்திரம் எனும் முக்கோணம் அறுகோணம் போன்ற வடிவங்களைத் தியானித்தல் போன்ற பயிற்சிகள், சிறு சடங்குகள் போல அல்லது ஒலியுடன் இணைந்து செய்யக்கூடிய தியான மற்றும் ஆழ்நிலைப் பயிற்சிகள், பெரும்பாலும் தாந்த்ரீக மரபிலிருந்து யோக மரபுக்கு வந்தவை.

ஏனெனில், முந்தைய யோகநூல்கள் மந்திரங்கள், யந்திரங்கள் போன்ற சடங்கு மற்றும் குறியீட்டுத் தன்மையைப் பற்றி பேசவில்லை. குண்டலினி உபநிஷத், சிவ சம்ஹிதை போன்ற நூல்கள்தான் யந்திர மந்திர கருதுகோள்களை முன்வைக்கின்றன. கடந்த ஐந்து அல்லது ஆறு நூற்றாண்டுகளாகத்தான் தாந்த்ரீகச் சடங்குகளை சிறுசிறு பகுதிகளாகப் பிரித்து எவரும் செய்யக்கூடிய பயிற்சிகளாக மாற்றி வடிவமைத்து யோகமரபு முன்வைக்கிறது.

இன்று நீங்கள் ஒரு யோக வகுப்பில் அமர்ந்தவுடன் சொல்லப்படும் ‘சஹநா வவது’ எனும் ஆரம்ப சாந்தி மந்திரம்  உபநிஷத்கால மந்திரம். தியான வகுப்பில் சொல்லப்படும்  புருவ மத்தியில் தீபச் சுடர் அல்லது நெஞ்சுப் பகுதியில் ‘அறுகோண வடிவம்’, வயிற்றுப் பகுதியில் சொல்லப்படும் ‘கீழ்நோக்கிய முக்கோணம்’ போன்ற அனைத்தும் தாந்த்ரீக மரபிலிருந்து யோகத்துக்குள் வந்திருக்கின்றன.

இதை, ஓர் ஆரோக்யமான ‘கொடுக்கல் வாங்கல்’ என்றே நாம் புரிந்துகொள்ள வேண்டும்.ஏனெனில், மற்ற மரபுகளும் யோகத்திலிருந்து தங்களுக்கான பயிற்சிகளை எடுத்தாள்கின்றன. உதாரணமாக,  ஆயுர்வேதத்தில்  வஸ்தி எனப்படும் குடலை சுத்திகரிக்கும் பயிற்சிக்கு, ஒரு குறிப்பிட்ட மருந்தை உட்கொண்ட பின்னர் நோயாளியை உட்கட்டாசனம் எனும் ஆசனப் பயிற்சியைச் செய்யவைப்பது இன்றும் நிகழ்கிறது. அதுபோலவே, தாந்த்ரீகப் பயிற்சிகளில் யோகமரபின் முத்திரைகளும், பிராணாயாம முறைகளும் முக்கியமான அடிப்படைகளாக வைத்துள்ளனர்.

‘நாம் அறிந்துகொள்ளவே முடியாத நமது ஆழ்மனம், நமது அகம், எதோ ஒரு வகையில் ஒலியுடன், குறிப்பிட்ட சப்தங்களுடன் தொடர்புடையவை. ஆகவே சில மந்திர சப்தங்கள் , சில மறை ஞானப் பாடல்கள், ஒருசில இசைக்கருவியின் ஒலிகள் நம்மை மெய் மறக்கச்செய்கிறது. அமைதியடையச்செய்கிறது. கொந்தளிக்கவும் வைக்கிறது. இந்த அறிவியலை மையமாக வைத்து நாத யோகம் எனும் யோகப் பிரிவு, தாந்த்ரீக மரபிலிருந்து மனிதனின் அகத்தைத் தீண்டக்கூடிய சப்தங்களை வைத்து எண்ணற்ற பயிற்சி முறைகளை ஏற்படுத்தி வைத்திருக்கிறது.  உதாரணமாக, மந்திரங்கள் என்றவுடன் நாம் ஏதோ சடங்கு, சம்பிரதாயம், மதம் என்று நினைத்துக்கொள்கிறோம்.  

சாதனா மந்திரங்கள் எனப்படுபவை மதங்களுக்கு அப்பாற்பட்ட, ஒலியால் நம் அகத்தில் சில மாற்றங்களைச் செய்யும்படி உருவாக்கப்பட்டவை. எவ்வித நம்பிக்கையும் அற்ற ஒருவருக்கும் இந்த ஒலிகள் மிகப்பெரிய அளவில் பலனளிப்பவை. இதை நாதயோகம் என்கிறது யோகமரபு. நாதயோகத்தால் ஒருவர் தன் அகத்துள் ஊடுருவிச் சென்று அறிந்து கொள்ளவும், தேவையற்றவற்றை அகற்றவும் முடியும். இதுவே இதன் முதன்மைப் பணி. அப்படி ஒன்றைத் தேர்ந்து கற்றுக்கொள்வதில் நமக்கு எந்த மனத்தடையும் இருக்க வேண்டியதில்லை. ஏனெனில், நன்மைகள் எங்கிருப்பினும் அதை நம்முள் கொணர்ந்து சேர்ப்பதற்கு தயக்கம் எதற்கு?

பாத ஹஸ்தாசனம்

மூட்டு மற்றும் தொடைப்பகுதியில் உள்ள இறுக்கங்கள் முழுவதையும் நீக்குவதிலும், முதுகுத்தண்டின் கீழ்ப்பகுதியில் தண்டுவடப் பிரச்சனைகளை தீர்ப்பதிலும், அடிவயிறு மற்றும் பெருங்குடல் சார்ந்த உபாதைகளை நீக்குவதிலும் இது முக்கியமான பயிற்சி. முடிந்தவரை மூட்டுகளை மடிக்காமல் முன்புறமாக குனிந்து தரையை தொட முயற்சி செய்யவும், மூச்சை உள்ளிழுத்துக்கொண்டே மேல்நோக்கி எழுந்து, சிறிதளவு பின்புறமாக சாயலாம். (காண்க  படம்) பகல் பொழுதில் ஏற்படும் சோர்வை நீக்குவதில் முக்கியமான பயிற்சி. பத்து முறை இதுபோல செய்துவிட்டு, சிறிது ஓய்வெடுக்கவும்.

Related Stories: