அத்திப்பழம் தரும் அற்புத நலன்கள்!

நன்றி குங்குமம் டாக்டர்

அத்திப்பழம் நார்ச்சத்தும், தாதுக்களும் நிறைந்த பழமாகும். அதில் இரும்பு, பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், தாமிரம், வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் எல், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. கிரேக்கர்கள் காலத்திலிருந்தே அத்திப்பழம் குழந்தைப்பேறுக்காக சாப்பிட்டுவந்ததாக கூறப்படுகிறது. இது கரு உருவாக உதவும் என்பது ஆய்விலும் கூறப்பட்டுள்ளது. ஏனெனில் இதில் இரும்புச்சத்து அதிகமாக இருப்பதால் கருப்பை ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

அத்திப்பழத்தில் பிரிபயோடிக் என்னும் பண்பு உள்ளது. இது செரிமான மண்டலத்தின் வேலையை சிறப்பாக மாற்ற உதவும். தினசரி 2 பழங்களை சாப்பிட்டால் உடலில் ரத்த உற்பத்தி அதிகரிக்கும். உடலும் வளர்ச்சி அடைந்து பருமனடையும்.  உடல்எடை குறைக்க நினைப்போர் உலர்ந்த அத்திப்பழத்தை 2 சாப்பிட்டு தண்ணீர் குடிக்க வயிறு முழுமையாகிவிடும். இதனால் நீண்டநேரம் பசிக்காது. சாப்பாடு குறைவாக சாப்பிடத்  தோன்றும்.

அத்திப்பழம் நார்ச்சத்து நிறைந்தது என்பதால் மலச்சிக்கல் நிவர்த்திக்கு நல்லது. வெறும் வயிற்றில் உலர்ந்த அல்லது பழுத்த அத்திப் பழங்களை 2, 3 என தினமும் சாப்பிட்டுவர மலச்சிக்கல் சரியாகும். பொட்டாசியம் சமநிலையில் இல்லாதபோது உயர் ரத்த அழுத்தத்திற்கு வழி வகுக்கும். எனவே இதை சரிசெய்ய நிறைவான பொட்டாசியம் சத்து கொண்ட அத்திப்பழம் சாப்பிடுவது உங்களுக்கு உதவும். உயர் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்.

அத்திக் காய்களில் இருந்து கிடைக்கும் பாலை வாய்ப்புண்ணில் தடவினால் வாய்ப்புண் ஆறும். அத்திக்காய்களை  சமைத்து உண்டு வர, ரத்த விருத்தி ஏற்படும். பித்தம் தணியும். வெள்ளைப்படுதலை தடுக்கும். ஆண்மையை பெருக்கும்.அத்தி எளிதில் ஜீரணமாவதுடன் கல்லீரல், மண்ணீரல் போன்ற ஜீரண உறுப்புகளை நல்ல முறையில் சுறுசுறுப்புடன் செயலாற்றச் செய்கிறது. சீமை அத்திப்பழம் வெண்குஷ்டத்தை குணமாக்குகிறது. அரை கிராம் காட்டு அத்திப்பழத்தை தினசரி ஒரு வேளை சாப்பிட்டு வந்தால், வெண்புள்ளிகள், வெண்குஷ்டம், தோலின் நிறமாற்றம் ஆகியவை குணமாகும். அதைப் பவுடராக்கி பன்னீரில் கலந்து,வெண்புள்ளிகள் மீது பூசலாம்.

தொகுப்பு : ரிஷி

Related Stories: