உலகப் பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை திருவிழா ஏப்.23ல் துவக்கம்: மே 5ல் அழகர் வைகையில் இறங்கும் வைபவம்

மதுரை: மதுரையில் சித்திரை திருவிழா ஏப். 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. மே 2ம் தேதி மீனாட்சி திருக்கல்யாணம், மே 5ம் தேதி அழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் பிரசித்தி பெற்ற சித்திரை திருவிழா, ஏப். 23ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்றைய தினம் காலை 10.35 மணிக்கு மேல் 10.59 மணிக்குள் மிதுன லக்னத்தில் சுவாமி சன்னதியில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்படுகிறது. அன்றைய தினத்தில் இருந்து மீனாட்சி, சுந்தரேஸ்வரர் காலை, இரவு என இருவேளையும் பல்வேறு வாகனங்களில் வலம் வருவர். விழாவில் ஏப். 30ம் தேதி முக்கிய நிகழ்ச்சிகள் தொடங்குகின்றன. அன்று மீனாட்சியம்மன் பட்டாபிஷேகம், மே 1ம் தேதி திக்கு விஜயம் நடைபெறுகிறது.

மே 2ம் தேதி மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடக்கிறது. அன்றைய தினம் காலை 8.35 மணிக்கு மேல் 8.59 மணிக்குள் திருக்கல்யாண நிகழ்வுகள் மேற்கு, தெற்கு ஆடி வீதி சந்திப்பில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெறும். அன்று இரவு மீனாட்சியம்மன் புஷ்ப பல்லக்கில் எழுந்தருளி காட்சி அளிக்கிறார். மே 3ம் தேதி மாசி வீதிகளில் சுவாமி, அம்பாள் தேரோட்டம் நடைபெறும். அதனை தொடர்ந்து 4ம் தேதி தீர்த்தவாரியுடன் விழா நிறைவு பெறுகிறது. தொடர்ந்து அழகர் கோயில் சித்திரை திருவிழாவும் தொடங்குகிறது. அதில் முக்கிய நிகழ்வாக மே 4ம் தேதி மதுரை வரும் அழகரை மக்கள் எதிர் கொண்டு அழைக்கும் எதிர்சேவை நிகழ்ச்சி புதூர் மூன்றுமாவடி பகுதியில் நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக அழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் மே 5ம் தேதி நடைபெறுகிறது. இந்த இரு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் துணை கமிஷனர்கள் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Related Stories: