100 நாள் வேலை திட்டத்தில் ரூ.294 ஊதிய உயர்வு; ரூ.154 கோடியில் 2,043 புதிய சத்துணவுக் கூடங்கள்: பேரவையில் அமைச்சர் ஐ.பெரியசாமி அசத்தல் அறிவிப்பு

சென்னை: 100 நாள் வேலை திட்டத்தில் தமிழ்நாட்டில் ஏப்.2-ம் தேதி முதல் ரூ.294 ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். பேரவையில் பேசிய அமைச்சர், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றுச்சுவர் கட்டப்படும். தமிழ்நாட்டில் 2,500 ஊராட்சிகளில் உள்ள பள்ளி சீரமைப்புகளுக்கு ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்து பணிகள் நிறைவு செய்யப்படும். தமிழ்நாட்டில் திமுக ஆட்சியின் 2 ஆண்டுகளில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் 2.16 லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. 149 சமத்துவபுரங்களை சீரமைக்க ரூ.190 கோடி ஒதுக்கீடு செய்து பணிகள் முடிவடைந்துள்ளன என்று தெரிவித்தார்.

நமக்கு நாமே திட்டத்துக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு:

நமக்கு நாமே திட்டத்துக்கு நடப்பாண்டில் ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் ஐ.பெரியசாமி கூறினார்.

ரூ.154 கோடியில் 2,043 புதிய சத்துணவுக் கூடங்கள்: அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவிப்பு

ரூ.154 கோடியில் 2,043 புதிய சத்துணவுக் கூடங்கள் அமைக்கப்படும் என்று அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவித்துள்ளார். ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் 2,043 புதிய சத்துணவுக் கூடங்கள் அமைக்கப்படும். முதலமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டத்தை செயல்படுத்தும் வகையில் புதிய சத்துணவுக் கூடங்கள் அமைக்கப்படுகிறது. மலைப் பகுதியில் உள்ள ஊராட்சிகளின் அடிப்படை தேவைகளை மேம்படுத்த ரூ.30 கோடியில் சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். சுற்றுச்சூழல் மாசுகளை குறைக்கும் வகையில் 1,500 கி.மீ. ஊரகச் சாலைகள் அமைக்க 500 மெ.டன் நெகிழி கழிவுகள் பயன்படுத்தப்படும்.

தூய்மை காவலர்களின் மாதாந்திர மதிப்பூதியம் உயர்வு

ஊரகப் பகுதிகளில் பணிபுரியும் 66,130 தூய்மைக் காவலர்களின் மாதாந்திர மதிப்பூதியம் உயர்த்தப்படுவதாக அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவித்துள்ளார். மாதாந்திர மதிப்பூதியம் ரூ.3,000-லிருந்து ரூ.5,000ஆக உயர்த்தி வழங்க ரூ.112 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஊரகப் பகுதிகளில் ரத்த சோகையை குறைக்கும் பொருட்டு 27 லட்சம் முருங்கைக் கன்றுகள் வழங்கப்படும். 10.50 லட்சம் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு ரூ.137 கோடியில் 27 லட்சம் முருங்கைக் கன்றுகள் வழங்கப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

ரூ.1,000 கோடியில் 10 லட்சம் வீடுகளுக்கு குடிநீர்:

ஊரகப் பகுதிகளில் ரூ. 1,000 கோடியில் 10 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணை ப்புகள் வழங்கப்படும் என்று அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவித்துள்ளார். விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த ரூ. 1,500 கோடியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும். சாலைகள், கால்வாய்கள், தெரு விளக்குகள், குடிநீர் வசதிகள் போன்றவை ஏற்படுத்தித் தரப்படும். ஊரகப் பகுதிகளில் 500 புதிய அங்கன்வாடி மையங்கள் ரூ.70 கோடியில் கட்டப்படும்  என்றும் அமைச்சர் கூறினார்.

Related Stories: