வியாபாரிகளிடம் பணம், நகை வழிப்பறி சம்பவம் கொள்ளைக்கும்பல் 5 பேர் கைது: காட்டிக்கொடுத்த சிசிடிவி கேமரா

ஊத்துக்கோட்டை: சென்னை அருகே திருவேற்காடு அடுத்த நெற்குன்றத்தில் வசிப்பவர் ராமேஸ்வர்லால் (42), இவர், தங்க நகை செய்து விற்கும் தொழில், அடகு கடை வியாபாரம் மற்றும் சிறு கடைகளுக்கு சில்லரையாக தங்கம்  வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த 21 தேதி திங்கள்கிழமை ராமேஸ்வர்லாலிடம் பணியாற்றும் ஊழியர்கள் காலுராம் (30), சோகன்லால் (28) ஆகியோர் சுமார் 177 சவரன் தங்கநகைகளை பைக்கில் வியாபாரத்திற்கு எடுத்துச்சென்றனர். இதில் பூந்தமல்லி,  நசரத்பேட்டை, பாக்கம், தாமரைப்பாக்கம் ஆகிய பகுதிகளில் நகைகளை 2 சவரன் விற்பனை செய்தும் கலெக்ஷனான பணம் மற்றும் பழைய பாக்கி ரூ..1 லட்சத்து 10 ஆயிரத்தை வசூல்செய்தனர்.

பின்னர் அங்கிருந்து சோகன்லால் பைக்கை ஓட்டிச்செல்ல பின்னால் அமர்ந்து வந்த காலுராம் 175 சவரன் நகைகள் மற்றும் ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் ரொக்கப்பணத்தை வைத்துக்கொண்டு செங்குன்றம் நோக்கி பைக்கில் சென்றனர். அப்போது காரணி - மாகரல் இடையில் சென்றபோது பின்னால் 2 பைக்கில்  வந்த முகமூடி அணிந்த 4 மர்மநபர்கள் அவர்களை வழிமடக்கி காலுராமை கத்தியால் வெட்டினர். இதில் அவருக்கு கையில் காயம் ஏற்பட்டது. பின்னர் அவரிடம் இருந்து 175 சவரன் நகை மற்றும் ரூ. 1 லட்சத்து 10 ஆயிரத்தைபறித்து கொண்டு தப்பிவிட்டனர்.

புகாரின்படி திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி. சிபாஸ் கல்யாண் வெங்கல் காவல் நிலையத்தில் இருந்த காலுராமிடம், சோகன்லாலுவிடம்  விசாரணை நடத்தினார். மேலும் 5 தனிப்படை அமைத்து மர்ம நபர்களை பிடிக்க  உத்தரவிட்டார். அதன்படி போலீசார் பூந்தமல்லி, நசரத்பேட்டை,  செம்பரம்பாக்கம்,  பட்டாபிராம்,  திருநின்றாவூர், தாமரைப்பாக்கம் ஆகிய பகுதிகளில் சாலையோரங்களில் உள்ள பெரிய கம்பெனிகள், கடைகள் போன்றவற்றில் இருந்த 200 சிசிடிவி கேமராக்களை ஆய்வுசெய்தனர். இதில் வழிப்பறி கொள்ளையர்கள் ஓட்டிச்சென்ற பைக்கின் வாகன எண் போன்றவற்றை ஆய்வு செய்தனர். பின்னர் போலீசார் நேற்றுமுன்தினம் வெங்கல் தாமரைப்பாக்கம் இடையே ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அணைக்கட்டு கொசஸ்தலை ஆற்றின் கரையோர பகுதியில் 5 பேர் கொண்ட கும்பல் இருந்ததை கண்ட போலீசார் மாறுவேடத்தில் கண்காணித்து மடக்கிபிடித்தனர்.  விசாரணையில். திருநின்றவூர் பாக்கம் பகுதியில் வசிக்கும் நகைகடை உரிமையாளர்கமல்கிறிஷோர் (31), பாலவேடு பகுதியை சேர்ந்த கிளிடாஸ் (30), கவிகுமார் என்ற பாலாஜி (29), சுகுமார் (26), தமிழ்மணி (28) ஆகிய 5 பேரும் நெற்குன்றம் நகைகடை ஊழியர்களிடம் வழிப்பறி செய்தது தெரியவந்தது.

இது குறித்து கமல் கிறிஷோர் வாக்கு மூலத்தில் கூறியதாவது: திருநின்றவூர் அடுத்த பாக்கம் பகுதியில் குஷ்பு ஜூவல்லரி என்ற நகைக்கடை வைத்துள்ளேன். கடந்த 21ம்தேதி திங்கள் கிழமை, நெற்குன்றத்தைசேர்ந்த காலுராம், சோகன்லால் ஆகியோரிடம்  சந்தேகம் வராமல் இருக்க 10 கிராம் நகைகளை விலைக்கு வாங்கினேன். பின்னர் அவர்களை  பல நாட்களாக நோட்டமிட்டு பின்னர் கொள்ளையடிக்க திட்டம் தீட்டினேன். அதற்கு பாலவேடு பகுதியில் இருந்து எனக்கு தெரிந்த 4 பேரை ஏற்பாடு செய்தேன்.

திங்கள் கிழமை, நெற்குன்றம் நகைகடை ஊழியர்களை காரில் பின் தொடர்ந்து, 2 பைக்கில் சென்ற 4பேர் தாமரைப்பாக்கம் அருகே ஆள் இல்லாத இடத்தில் வைத்து 175 சவரன் நகைகளையும் ரூ..1 லட்சத்து 10 ஆயிரத்தை வழிப்பறி செய்தோம் என்று கூறினார். மேலும் கைதுசெய்யப்பட்ட 5 பேரையும் திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். கொள்ளையர்களிடமிருந்து 175 சவரன்  நகைகள், கார் மற்றும் 2 பைக்கை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த வழிப்பறி வழக்கில் மேலும் 2 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

Related Stories: