உங்க வீட்டுக்கு எந்த கலர் பெஸ்ட்?

நன்றி குங்குமம் டாக்டர்

வண்ணங்கள் மனிதர்களின் வாழ்க்கையில் எப்போதும் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆனால், இதை நாம் அறிவதில்லை. ஓர் இடத்தில் நிறைந்துள்ள வண்ணத்துக்கும் நம் மன அமைப்புக்கும் நெருங்கிய தொடர்புள்ளது என்கிறார்கள் உளவியலாளர்கள். மகிழ்ச்சி, யோசிக்கும் திறன், மன அழுத்தம், எதிர்வினை மாற்றங்கள் போன்ற செயல்களுக்கு நிறங்களின் பங்கு முக்கியமானது.

வீடு என்பது நம் ஒரு நாள் ஓட்டத்துக்கு இளைப்பாறல் கொடுத்து மறுநாள் உழைப்புக்கு ஆற்றுப்படுத்தும் உறவுகளின் உன்னத வசிப்பிடம். வீட்டுச் சுவரில் மனதுக்கு இதமான வண்ணங்கள் இருந்தாலே உடலும் மனதும் ரிலாக்ஸாகவும் உற்சாகமாகவும் இருக்கும்.

முன்பெல்லாம்  வீடுகளுக்கு  அடர்ந்த நிறங்களையே பயன்படுத்தினர். ஆனால்,  தற்போது  அடர்ந்த நிறங்களை வெளிப்புற சுவர்களுக்கும்  உட்புறச் சுவர்களுக்கு வெளிர் நிற  ஷேடுகளையுமே  பெரும்பாலானோர் விரும்புகின்றனர். வீடு முழுவதையும்  ஒரே நிறத்தில்  பெயின்ட் செய்வதும்  பழைய ஃபேஷனாகிவிட்டது.  தற்போது ஒவ்வொரு  அறைக்கும் ஒவ்வொரு நிறம் தேர்ந்தெடுக்கின்றனர்.

ஒவ்வோர் அறைக்கும் நிறத்தைத்தேர்வுசெய்யும்போது  நமக்குப் பிடித்த நிறம் என்பதற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை அந்த வண்ணம் நமக்குள் பெருக்கும் உளவியல் பண்பு எப்படிப்பட்டது என்பதையும் புரிந்துகொண்டு வண்ணங்கள் தேர்வு செய்வது. வீட்டையும் வாழ்க்கையையும் அழகாக்கும்.

வரவேற்பறை

விருந்தினர்கள் நுழைந்ததும் நோட்டமிடும் வரவேற்பறை எனப்படும் லிவிங் ஏரியாவில் ஆரஞ்சு மற்றும் ஐவரி கலந்து அடித்தால், ஹால் பிரகாசமாக இருப்பதோடு, மனத்துக்கு உற்சாகத்தையும்கொடுக்கும். அதேபோன்று இந்த அறையில்  வெளிர் ஆரஞ்சு அல்லது சற்றே அடர் வண்ணங்களையும் அடிக்கலாம். இது மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கும் தன்மையுடைது.

படுக்கையறை

நிம்மதியாக ஓய்வெடுக்கவும், மனம்விட்டுப் பேசுவதற்கும் சிந்திப்பதற்கும் பயன்படுத்தும்  படுக்கை அறைக்கு லாவண்டர், பிங்க், நீலம் மற்றும் பச்சை வண்ணங்களின் லைட் ஷேடுகளைத் தேர்ந்தெடுக்கலாம். இயற்கை விரும்பிகள் பச்சை அல்லது நீல நிறங்களையும், புதிதாக திருமணமானவர்கள் பிங்க், லாவண்டர் நிறங்களையும் தேர்ந்தெடுக்கலாம். இது மனதிற்கு அமைதியையும், மகிழ்ச்சியையும்  தருகிறது.  

அதுபோன்று பழுப்பு நிறத்தையும் படுக்கை அறைக்குப் பயன்படுத்தலாம். பழுப்பு நிறத்தினால் மனதில் நல்ல எண்ணங்கள் உருவாகும் என்று நம்பப்படுகிறது. ஏனென்றால் பழுப்பு நிறம் நல்லிணக்கம் மற்றும் காதலை குறிப்பதாகும். மேலும் நேர்மறை எண்ணத்தையும் ஏற்படுத்தும்.

சமையலறை

வெப்பமாக  உணரப்படும்  சமையலறைக்கு, இறுக்கமான மனநிலையைக் கட்டுப்படுத்தும் திறனுடைய  வெள்ளை அல்லது சாம்பல் நிற ஷேடுகள்தான் சரியானது. இது மனதை இறுக்கம் மற்றும் கடுமையிலிருந்து தளர்த்தி ஒருநிலைப்படுத்த உதவுகிறது.

பூஜையறை

வெளிர் பிரவுன் மற்றும் மஞ்சள் நிறம் பூஜை அறை அல்லது வயதானவர்கள் தங்கும் அறைகளுக்கு தேர்வு செய்யலாம். இது அமைதியான சூழலை உருவாக்கும்.  

படிப்பறை மற்றும் குழந்தைகள் பெட்ரூம்

அதுபோன்று மஞ்சள் ஆற்றல் தரும் வண்ணமாகவும் சக்தி வாய்ந்த நிறம் என்றும் கூறப்படுகிறது. இதனால், குழந்தைகள் படிக்கும் அறை மற்றும் குழந்தைகள் தங்கும் அறைக்கும் மஞ்சள் வண்ணம் மிகச் சிறந்தது.

உட்கூரை

வீட்டின் உட்கூரைக்கு, சுவர்களில் அடித்திருக்கும் நிறத்துக்கு எதிர்மறையான நிறத்தை அடிப்பதே  இப்போதைய ட்ரெண்ட். அந்த வகையில், குளிர்ச்சியான இண்டிகோ வண்ணம் ஒரு இதமான உணர்வை  ஏற்படுத்தி, மனஅழுத்தத்தை குறைக்க உதவுகிறது. மேலும் மனதுக்குள் அமைதியான உணர்வை ஓங்கச்செய்கிறது  என்று  நிறம்  குறித்த  ஆய்வுகள்  கூறுகின்றன.

தொகுப்பு : ஸ்ரீதேவி குமரேசன்

Related Stories: