ஒமிக்ரான் அறிகுறிகள்!

நன்றி குங்குமம் தோழி

இரண்டு ஆண்டுகளாக லட்சக்கணக்கான பொதுமக்கள் தங்கள் தினசரி ஆரோக்கிய தகவல்களை ஜோ கோவிட் (ZOE COVID) செயலி மூலமாக ஆய்வுக்கு வழங்கி பெருந்தொற்றின் போக்கைப் புரிந்துகொண்டு வருகின்றனர். குறிப்பாக, ஆய்வு செயலி வாயிலாக அளிக்கப்பட்ட 480 மில்லியன் அறிக்கைகள், இந்த வைரஸ் எப்படி மாறிக்கொண்டிருக்கிறது என்பதையும், அதற்கேற்ப அறிகுறிகள் எப்படி மாறியிருக்கின்றன என்பதையும் உணர்த்தியுள்ளன.

2020 துவக்கத்தில், கொரோனா வைரசின் மூலம், ஆல்பா வடிவங்கள், இருமல், காய்ச்சல், வாசனை பாதிப்பு ஆகிய மூன்று முக்கிய அறிகுறிகளையும், இன்னும் 20 பிற அறிகுறிகளையும் கொண்டிருந்தது. களைப்பு, தலைவலி, மூச்சுத் திணறல், தசை வலி, வயிறு பிரச்னை ஆகியவை இதில் அடங்கும். மேலும் சருமப் புண்கள் போன்ற  வழக்கத்திற்கு விரோதமான அறிகுறிகளும் அடங்கும்.டெல்டா உருமாறித் தோன்றியதும், பரவலாகக் காணப்படும் அறிகுறிகள் மாறியதை உணர்ந்தோம்.

இதற்கு முன்னர் முதன்மையாக இருந்த மூச்சுத் திணறல், காய்ச்சல், வாசனை பாதிப்பு ஆகியவை பின்னுக்குத் தள்ளப்பட்டன. ஜலதோஷம் போன்ற, மூக்கில் சளி, தொண்டை பாதிப்பு, இடைவிடாத தும்மல் ஆகியவற்றோடு, தலைவலி, இருமல் ஆகியவை அதிகம் காணப்பட்டன. கூடுதலாக தலைச்சுற்றல், தசை வலி, வயிற்றுப்போக்கு, சரும பாதிப்பு போன்ற பொதுவான அறிகுறிகளையும் உண்டாக்கி வருகிறது.

பிரிட்டனில் ஒமிக்ரான் பரவிக்கொண்டிருந்தபோது, கோவிட்டால் பாதிக்கப்பட்டவர்களின் மருத்துவ அறிக்கையை ஆய்வு செய்து, டெல்டா உருமாற்றம் குறித்த தரவுகளுடன் ஒப்பிட்ட போது, டெல்டா, ஒமிக்ரான் வைரஸ்களின் ஒட்டுமொத்த அறிகுறிகளில் எந்த பெரிய வேறுபாடும் இல்லை என்றும், மூக்கில் சளி, தலைவலி, களைப்பு, தும்மல், தொண்டை பாதிப்பு ஆகிய ஐந்து அறிகுறிகள் அதிகம் இருப்பது ஆய்வில் தெரியவந்தது.

ஒமிக்ரான் பொதுவான அறிகுறிகள்

ஆரம்பகட்டத்தில் முதல் பத்து அறிகுறிகளில் ஒன்றாக இருந்த வாசனை பாதிப்பு 17ஆவது இடத்திற்கு வந்துவிட்டது. இது ஒரு காலத்தில் கோவிட் முக்கிய அறிகுறியாக இருந்தது, இப்போது தொற்று பாதிப்பு கொண்ட ஐந்து பேரில் ஒருவரிடம் மட்டும் தான் உள்ளது. மேலும் மூன்றில் ஒரு பங்கு மக்களுக்கு மட்டுமே காய்ச்சல் உண்டாகிறது. கடந்த கோவிட் காலத்தில் பார்த்ததைவிட இதுவும் குறைவானது.

ஒமிக்ரான் பாதிப்பு எப்படி?

இந்தப் புதிய உருமாற்றம் முந்தைய உருமாற்றங்களைவிடத் தீவிரமாகப் பரவும் தன்மை கொண்டது. இதன் காரணமாக மருத்துவமனைகளில் நோயாளிகள் குவிவார்களா என்பது தெரியவில்லை என்றாலும், ஒமிக்ரான் அல்லது டெல்டா ஜலதோஷமாகத் தோன்றினாலும், தடுப்பூசி போடாதவர்களுக்கு இதன் பாதிப்பு அதிகமாக இருக்கலாம். இதுவரை இளைஞர்கள் மத்தியில் பாதிப்புகளைக் கண்டிருந்தாலும், தற்போது வயதானவர்கள் மத்தியிலும் இதன் பாதிப்பு அதிகரித்துள்ளது. தற்போது உலகம் முழுதும் 75 வயதுக்கு மேலானவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதனால் இந்த தொற்றின் பாதிப்பு மற்றும் மருத்துவமனை சேர்க்கை குறைய வாய்ப்புள்ளது.

ஒமிக்ரான் / ஜலதோஷம்

டிசம்பர் மாதம் பொதுவாகவே உலகம் முழுதும் குளிர் அதிகமாக இருக்கும். மேலும் இப்போது திடீரென்று மழை ஒரு பக்கம் பொழியவும் செய்கிறது. சீதோஷ்ண நிலை மாற்றத்தினால் ஜலதோஷம் மற்றும் ப்ளு காய்ச்சல் அதிகமாக ஏற்படும். தற்போதைய கோவிட் உருமாற்றம் உண்டாக்கும் அறிகுறிகள் வழக்கமான ஜலதோஷம் போலவே இருப்பதை ஜோ கோவிட் ஆய்வு செயலி உணர்த்துகிறது. எனவே அறிகுறிகளை மட்டும் வைத்துக்கொண்டு ஒருவருக்கு சாதாரண ஜலதோஷம் பாதிப்பு என்று சொல்லிட முடியாது. சோதனை செய்யப்பட்டு அதற்கான ரிசல்ட் வரும் வரை கோவிட் தொற்றுக்கான சிகிச்சை அளிக்கப்படலாம்.

எனவே, உங்கள் குடும்ப உறுப்பினர் நலமற்று  இருந்தால் அது கோவிட் பாதிப்பாக இருக்கலாம். அதிலும் குறிப்பாகத் தும்மல் அதிகம் இருந்தால். வீட்டிலேயே இருப்பதும், உடனே சோதனை செய்வதும் அவசியம். இறுதியாக, அரசு வழிகாட்டி நெறிமுறைகளை மீறி, கோவிட் பாதிப்பு இருக்கிறதா இல்லையா என்பதை மீறி, ஜலதோஷம் போன்ற அறிகுறிகள் இருந்தால், தனிமைப்படுத்திக்கொண்டு முகக்கவசம் அணியுங்கள்.

தொகுப்பு: விவி

Related Stories: