தயிர் தகவல்கள்

நன்றி குங்குமம் தோழி

* தயிரின் மேல் நிற்கும் ஆடையை மட்டும் எடுத்து சிறிது தேன், வெல்லம் சேர்த்துச் சாப்பிட உடல் புஷ்டியைத் தரும்.

* உறை ஊற்றிய பின் சிலசமயம் நன்கு உறையாமல் இருக்கும் (அதாவது பால் நிலைக்கும் தயிர் நிலைக்கும் இடையே இருக்கும்) அதனை உட்கொண்டால், பசியைக் குறைத்து, நெஞ்செரிச்சல், புளித்த ஏப்பம், வாய்ப்புண் ஆகியவற்றிற்கு வழிவகுக்கும். நன்கு உறைந்த தயிரை சாப்பிடுவது சிறந்தது.

* மண் சட்டியிலிருந்து புரை ஊற்றிய தயிர்தான் நமது தேக ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்தது. அது கெட்டியாகவும் இருக்கும்.

* ஒருபோதும் தயிரை சுட வைத்துச் சாப்பிடக்கூடாது. சிலர் சூடான சாதத்தில் தயிர் கலந்து கடுகு தாளித்து உப்பு சேர்த்து சாப்பிடுவார்கள். இது உடலுக்கு ஏற்றதல்ல.

* உடலைப் புஷ்டிப்படுத்த விரும்புபவர்கள் வேக வைத்த பச்சைப்பயிறு, நெல்லிக்காய்த் துவையலுடன் தயிர் சாப்பிடலாம்.

* தோய்ந்து நிற்கும் தயிரின் அடிப்பகுதியில் தெளிவான தண்ணீர் காணப்படும். இது இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு மூன்றும் கலந்த சிறந்த பானம். அந்தத் தண்ணீரை வெறும் வயிற்றில் காலை, மாலை கால் கிளாஸ் குடித்தால் தொண்டை எரிச்சல், குமட்டல், உடற்சூடு, களைப்பு, தலைச்சளி நீங்கும்.

* தயிரை துணியில் வடிகட்டி அதிலுள்ள நீர் முழுவதும் வடிந்த பிறகு அதனுடன் சர்க்கரை, ஏலக்காய், கிராம்பு, குங்குமப்பூ, பச்சைக்கற்பூரம் சேர்த்து குளிர வைத்தால் ஸ்ரீகண்ட் இனிப்பு தயார். இது உடல் உஷ்ணத்தைக் குறைக்கும்.

* பசியில்லாதவர்கள் லேசான புளிப்புடன் இருக்கும் தயிரை சாப்பிட்டால் பசி எடுக்கும்.

* நன்றாக புளித்த தயிர் ரத்தக்கொதிப்பு. பித்த வாயு, வயிற்றுக்கோளாறுகள் உள்ளவர்களுக்கு ஏற்றதல்ல.

* இரவில் குளிர்ச்சியான தன்மையில் தயிரைச் சாப்பிட்டால் ஜீரணக்குறைவு, மூச்சிறைப்பு, ரத்த சோகை, காமாலை, தோல் நோய்கள், ரத்தக்கொதிப்பு போன்றவை உண்டாகும்.

* இரவில் தயிர் சாப்பிட வேண்டிய நிர்ப்பந்தம் வந்தால் அதனுடன் சிறிது தேன் கலந்து சாப்பிடலாம். அல்லது சீரகம், இந்துப்பு, பெருங்காயம் சேர்த்து சாப்பிடலாம்.

தொகுப்பு: ச.லெட்சுமி, செங்கோட்டை

Related Stories: