எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் திரிபலா

நன்றி குங்குமம் தோழி

வாசகர் பகுதி

திரிபலா என்பது இந்திய பாரம்பரிய ஆயுர்வேத மருந்துகளில் தலைமையானது. இது ஒரு முழுமையான வேதியப் பொருளாகவும், காயகல்பமாகவும் கருதப்படுகிறது.நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் ஆகிய மூன்று மூலிகைகள் உள்ளடங்கிய கூட்டுப் பொருள்தான் ‘திரிபலா’. இதனைப் பொடியாகவோ, சூரணமாகவோ சாப்பிடுவதால் உடலுக்கு பலவிதங்களில் நன்மை வந்து சேரும்.

*இந்த மூலிகை உணவுப் பாதையினுள்ள நச்சுகளை நீக்கி, குடல் இயக்கத்தை மேம்படுத்தும் தன்மை கொண்டது. உடலில் உள்ள நச்சுப் பொருட்களையும் வெளியேற்றும். செரிமானக் கோளாறு பிரச்னையை சரி செய்யும்.

*வயிற்றில் பூச்சிகள் வளர்வதை தடுக்கும். அதோடு வயிற்றிலுள்ள புழுக்களை வெளியேற்றவும் உதவும். வயிற்றுப் புண்களை ஆற்றும்.

*தான்றிக்காய் செரிமானத்தை மேம்படுத்துவதோடு பாக்டீரியா, வைரஸ் போன்ற தொற்றுக் கிருமிகளுக்கு எதிராக போராடும் தன்மை கொண்டது. ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கவும் இது துணைபுரியும்.

*கடுக்காய் வயிறு தொடர்பான பல்வேறு உபாதைகளுக்கு நிவாரணியாக செயல்படுகிறது. குறிப்பாக மலச்சிக்கலைத் தீர்க்க பெரிதும் உதவுகிறது.

*நெல்லிக்காயில் இருக்கும் வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். சுவாச பாதையில் படிந்திருக்கும் சளியை நீக்கி நுரையீரல் ஆரோக்கியத்தை வலுப்படுத்தும்.

*திரிபலாவில் இருக்கும் கசப்பு சுவை ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்க உதவும். கணையத்தில் இன்சுலின் சுரப்பை அதிகரிக்கச் செய்து குளுக்கோஸின் அளவை சமநிலைப்படுத்தவும் செய்யும்.

*சைனஸ் பிரச்னையையும் போக்கும். சுவாசக் குழாயிலுள்ள அடைப்பை நீக்கி சீரான சுவாசத்திற்கு வழிவகை செய்யும். சுவாசப் பாதையில் அடைபட்டிருக்கும் சளியை நீக்கும்.

*ரத்த சோகை பாதிப்புக்குள்ளானவர்கள் திரிபலாவை சாப்பிட்டு வரலாம். அதற்கு ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் தன்மை இருக்கிறது. இதய நோய் வராமல் தற்காத்துக் கொள்ளவும் உதவும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் செய்யும்.

*திரிபலா பொடியை வீட்டிலேயே தயாரிக்கலாம். கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் ஆகிய மூன்றையும் சம பங்கு எடுத்து நிழலில் நன்றாக உலர்த்தி பொடியாக அரைத்துக் கொள்ளலாம். அல்லது நாட்டு மருந்து கடையில் திரிபலா பொடியை வாங்கி பயன்படுத்தலாம். ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் ஒரு டீஸ்பூன் திரிபலா பொடியை கலந்து, வெறும் வயிற்றில் பருகலாம். இரவில் தூங்கச் செல்லும் போதும் பருகலாம். உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தினமும் திரிபலாவை எடுத்துக் கொள்ளலாம்.

தொகுப்பு: ச.லெட்சுமி, தென்காசி.

Related Stories: