பாலாற்றில் கட்டிட கழிவுகள், குப்பைகள் அகற்றம்-வேலூர் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

வேலூர் : வேலூர் பாலாற்றில் கொட்டி இருந்த கட்டிட கழிவுகள், குப்பைகளை தினகரன் செய்தி எதிரொலியாக மாநகராட்சி அதிகாரிகள் நேற்று அகற்றனர்.வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்குவது பாலாறு. மேலும் விவசாய நிலங்களும் பயன்பெற்று வருகிறது. இந்த பாலாற்றில் இருந்து பெறப்படும் தண்ணீரைக்கொண்டு, பல ஆயிரக்கணக்கான விவசாயிகள், நீர்பாசன வசதி பெற்றுள்ளனர்.

இவ்வாறு பாலாற்றை நம்பி ஆயிரக்கணக்கான விவசாயிகள் விவசாயம் செய்து வந்தனர். மணல் கொள்ளை, உள்ளாட்சி அமைப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், குப்பைகள், கட்டிட கழிவுகள் ஒருபுறம் என்றால், தோல் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் ரசாயன கழிவுநீர் மற்றொரு புறம். இதனால் தற்போது பாலாறு, பாழாறாக மாறி வருகிறது.

இந்நிலையில் வேலூர் முத்துமண்டபம் பகுதியில் தனியார் நிறுவனங்களை சேர்ந்தவர்கள் வாகனங்களில் கொண்டு வந்து கட்டிட கழிவுகளை குவியல் குவியலாக கொட்டிவிட்டு சென்றனர். இதேபோல் புதிய பஸ்நிலையம் அருகே புதிய அண்ணா மேம்பாலம் அருகே மாநகராட்சியில் சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் குப்பைகளையும் கொட்டும் சம்பவம் அதிகரித்து வருவதாக தினகரன் நாளிதழியில் நேற்று படத்துடன் செய்தி வெளியானது.

இதையடுத்து நேற்று காலை சுகாதார அலுவலர் முருகன் தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள் பாலாற்றில் கொட்டி வைக்கப்பட்டு இருந்த கட்டிட கழிவுகள் மற்றும் குப்பைகளை அகற்றினர். தொடர்ந்து குப்பை மற்றும் கட்டிட கழிவுகளை கொட்டும் நபர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: