ஓட்டேரியில் சினிமா ஸ்டண்ட் கலைஞர் தூக்குப்போட்டு தற்கொலை: போலீசார் விசாரணை

பெரம்பூர்: ஓட்டேரியில் சினிமா ஸ்டண்ட் கலைஞர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை ஓட்டேரி ஏகாந்திபுரம் 4வது தெரு பகுதியை சேர்ந்தவர் அரவிந்தன் (28), சினிமா ஸ்டண்ட் கலைஞர். இவர், கடந்த ஆண்டு ரீனா (28) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சில மாதங்களாக அரவிந்தன் குடிபோதைக்கு அடிமையாகி அதிகமாக குடித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 2 நாட்களாக குடிபோதையில் தனக்கு வாழ பிடிக்கவில்லை எனவும், தான் தற்கொலை செய்துகொள்ள போவதாகவும் தனது குடும்பத்தாரிடம் கூறிவந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று காலை குடிபோதையில் வீட்டிற்கு வந்தவர் காலை 10 மணியளவில் தூங்கப் போவதாக கூறிவிட்டு படுக்கையறைக்கு சென்றவர் கதவை தாழிட்டுக் கொண்டார். பின்பு வெகு நேரம் ஆகியும் வெளியே வராததால் அவரது தாய் கதவை தட்டியுள்ளார். அப்போது, கதவு திறக்காததால் ஜன்னல் வழியாக பார்த்தபோது அரவிந்தன் இரும்பு பைப்பில் புடவையால் தூக்குப்போட்டுக் கொண்டது தெரிந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த அவரது தாயார் கூச்சலிட்டு அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அரவிந்தன் உயிரிழந்த நிலையில் இருந்துள்ளார்.

இதுகுறித்து ஓட்டேரி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற ஓட்டேரி போலீசார் அரவிந்தனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சினிமா துறையில் பணிபுரியும் இடத்தில் ஏதாவது பிரச்னையா அல்லது குடும்பத்தில் ஏதாவது பிரச்னையால் அரவிந்தன் தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில், போலீசார் விசாரணை  நடத்தி வருகின்றனர்.

Related Stories: