வீட்டிற்கு விளையாட வந்த 6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு சினிமா சிரிப்பு நடிகர் ஏபி.ராஜூ போக்சோ சட்டத்தில் கைது: விருகம்பாக்கம் போலீஸ் நடவடிக்கை

சென்னை: 6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில், சினிமா சிரிப்பு நடிகர் ஏபி.ராஜூவை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். சென்னை வளசரவாக்கம் பகுதியை சேர்ந்தவர் மோகன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர், சினிமாவில் உதவி இயக்குனராக உள்ளார். இவரது மனைவி சின்னத்திரை நடிகை. இவர்களுக்கு 6 வயதில் மகள் உள்ளார். இவர் வளசரவாக்கத்தில் உள்ள பள்ளி ஒன்றில் 2ம் வகுப்பு படித்து வருகிறார். ஆறு வயது சிறுமி அங்கு வசிக்கும் அனைவரிடமும் பழகி வந்துள்ளார்.

அதேநேரம், விருகம்பாக்கம் வெங்கடேஷ் நகர் முதல் தெருவை சேர்ந்த சினிமாவில் சிரிப்பு மற்றும் பல்வேறு வேடங்களில் நடித்து வரும் ஏபி.ராஜூ (49), மாணவியின் ெபற்றோரின் நண்பர். இதனால் ஏபி.ராஜூ வீட்டிற்கு அடிக்கடி சிறுமி வந்து செல்வாராம்.  அதன்படி கடந்த 14ம் தேதி இரவு 8 மணிக்கு சிறுமி நடிகர் ஏபி.ராஜூ வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது ஏபி.ராஜூ மட்டும் வீட்டில் இருந்துள்ளார். அதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட நடிகர், சிறுமிக்கு சாக்லெட் கொடுத்தும் ஆசைவார்த்தை கூறியும் பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதுகுறித்து வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டி சிறுமியை வீட்டிற்கு அனுப்பியுள்ளார்.

பின்னர் வீட்டிற்கு வந்த சிறுமி மிகவும் சோர்வுடனும், மார்பு மற்றும் உடலின் பல இடங்கள் வீக்கமாக இருந்தை அவரது பெற்றோர் பார்த்து கேட்டுள்ளனர். அப்போது சிறுமி ‘ராஜூ அங்கிள்’ இதுபோன்று தொந்தரவு செய்தார் என்று கூறியுள்ளார். அதை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் உடனே சம்பவம் குறித்து விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.புகாரின்படி போலீசார் நடிகர் ஏபி.ராஜூவை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் வீட்டிற்கு விளையாட வந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததை அவர் ஒப்புக்கொண்டார். பின்னர் போலீசார் ராஜூ மீது போக்சோ சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து அதிரடியாக கைது செய்தனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: