நிதிஷ்குமார் தலைமையிலான பீகார் அமைச்சரவை இன்று விரிவாக்கம்: 26 பேர் புதிய அமைச்சர்களாக பதவியேற்க வாய்ப்பு.. ஓபிசி பிரிவினருக்கு பிரதிநிதித்துவம்?

பாட்னா: நிதிஷ் குமார் தலைமையிலான பீகார்  அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டு புதிய அமைச்சர்கள் பதவியேற்க உள்ளனர். ஆட்சி கவிழ்ப்பில் இருந்து தன்னை காப்பாற்றிக் கொண்டதோடு பாரதிய ஜனதாவையும் ஓரம்கட்டிய நிதிஷ் குமார், தற்போது ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் இடதுசாரிகள் மற்றும் சுயேச்சைகளின் உதவியோடு மீண்டும் முதலமைச்சராகியுள்ளார். முதலமைச்சராக நிதிஷ் குமாரும், துணை முதலமைச்சராக லாலு பிரசாத்தின் மகனான தேஜஸ்வி பிரசாத்தும் கடந்த 10ம் தேதி பதவியேற்றுக்கொண்டனர்.

இந்த நிலையில் இன்று விரிவாக்கம் செய்யப்படும் அமைச்சரவையில் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் இடதுசாரிகள் மற்றும் ஒரு சுயேச்சை என அதிகபட்சம் 26 பேருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என தெரிகிறது. எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பிகாரில் 36 பேர் அமைச்சர்களாக நியமிக்கப்பட அனுமதி உண்டு. நிதிஷின் புதிய அமைச்சரவையில் இந்த முறை இதரப்பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு பிரதிநிதித்துவம் அளிக்கப்பட இருப்பதாக தெரிகிறது. அதேநேரம் முன்னாள் அமைச்சர்கள் சிலர் மீண்டும் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர். லாலுவின் மற்றொரு மகனான தேஜ் பிரதாப்புக்கும் அமைச்சர் பதவி வழங்கப்பட இருக்கிறது. காலியாக இருக்கும் அமைச்சர் பதவிக்கான இடங்கள் இன்னும் சில நாட்களில் நிரப்பப்பட உள்ளன.

Related Stories: