தமிழகத்தில் நாளை முதல் 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்..!

சென்னை: தமிழகத்தில் நாளை முதல் 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; மேற்கு திசை காற்றின் வேக மாறுபாட்டால் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. ஆக.11 முதல் 14ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும். தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, நெல்லை, குமரி, மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும்.

சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் அதிகபட்சமாக கூடலூர் பஜாரில் 14, அவலாஞ்சியில் 11, மேல் கூடலூரில் 10 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இன்று ஆந்திர கடலோரப் பகுதி, மத்திய மேற்கு வங்கக்கடலில் பலத்த சூறாவளி வீச வாய்ப்பு உள்ளது. குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென் தமிழக கரையோரம், தென் மேற்கு வங்கக்கடலில் பலத்த காற்று வீசும். லட்சத்தீவு, வட கேரளா, கர்நாடகா கடலிற பகுதி, தென் கிழக்கு, மத்திய கிழக்கு அரபிக்கடலில் பலத்த காற்று வீசக்கூடும். நாளை ஆந்திர கடலோரப் பகுதி, மத்திய மேற்கு வங்கக்கடலில் பலத்த சூறாவளி வீச வாய்ப்பு உள்ளது.

குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதிகள், தென் மேற்கு வங்கக்கடலில் பலத்த காற்று வீசும். கர்நாடக கடலோரம், மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளிலும் பலத்த காற்று வீச வாய்ப்பு உள்ளது. ஆக 12-ல் ஆந்திரா, மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்த சூறாவளி வீச வாய்ப்பு உள்ளது. கர்நாடகத்தின் கடலோரம், மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும். 40 - 65 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதால் மீனவர்களுக்கு இன்று முதல் 3 நாட்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: