இரண்டு பெண்களின் கதை!

நன்றி குங்குமம் தோழி

கடந்த காலத்தைச் சேர்ந்த ஓர் இளம் பெண்ணுடன் நிகழ்காலத்தில் வாழும் பெண்ணை இணைக்கிறது ஒரு போன் கால். அதற்குப் பிறகு அவர்களின் வாழ்க்கையில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்கிறது என்பதுதான் ‘த கால்’ என்ற கொரியன் படத்தின் கதை. 2019-ம் வருடத்தின் ஒரு நாள். கொரியாவிலிருக்கும் ஓர் அழகிய கிராமம். அங்கே நோயினால் படுக்கையில் கிடக்கும் அம்மாவைக் காணச் செல்கிறாள் இளம் பெண் சியோன். அப்பா தீ விபத்தில் இறந்து போனதற்குக் காரணம் அம்மா தான் என்று நினைக்கிறாள் சியோன். அதனால் அம்மாவைவிட்டு  கொஞ்சம் காலம் தள்ளியே நின்றாள்.

பல வருடங்களுக்குப் பிறகு இப்போதுதான் அம்மாவைச் சந்திக்கப்போகிறாள். போகும் வழியில் தனது மொபைல் போனைத் தொலைத்துவிடுகிறாள். அவளால் யாரையும் தொடர்பு கொள்ள முடிவதில்லை. அவள் சிறு வயதில் வாழ்ந்த வீடு அந்தக் கிராமத்தில்தான் இருக்கிறது. பல வருடங்களாக பூட்டியே கிடக்கும் அந்த வீட்டுக்கு ஒரு விசிட் அடிக்கலாம் என்று நினைக்கிறாள்.

வீட்டுக்குள் போனால் பாழடைந்த பங்களா போல அவளை பயமுறுத்துகிறது அந்த வீடு. எந்தவித சத்தமுமில்லாமல் மௌனமாக இருள் சூழந்துகிடக்கிறது. அங்கே பழமையான எண்களை சுழற்றும் டெலிபோன் ஒன்று சியோனின் கண்ணில் படுகிறது. அந்தப் போனுக்கு இடைவிடாமல் அழைப்பு வந்துகொண்டே இருக்கிறது. யாரும் இல்லாத வீட்டில் எப்படி போனில் அழைப்பு வருகிறது என அதிர்ச்சியில் பதறிப்போகிறாள் சியோன். வீட்டைவிட்டு வெளியே ஓடிப்போகலாம் என்று முயற்சிக்கிறாள்.

ஆனால், ஏதோவொன்று அவளை அங்கேயே இருக்க வைக்கிறது. மறுபடியும் போன் விடாமல் ஒலிக்கிறது. ஒரு கட்டத்தில் போனை எடுத்து பேசி விடுகிறாள் சியோன். எதிர்தரப்பில் இருந்து ‘‘என் அம்மா கொடுமைப்படுத்துகிறாள். ப்ளீஸ் என்னை எப்படியாவது காப்பாற்றுங்கள்...’’ என்று ஒரு பெண்ணின் குரல் அலறுகிறது. பயத்தில் போனை வைத்துவிடுகிறாள். அந்த நேரத்தில் வீட்டின் கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்கிறது. அதிர்ச்சியடையும் சியோன் வீடு முழுவதும் சல்லடை போட்டு தேடுகிறாள்.

சத்தம் வந்த இடத்தில் ஒரு பாதாள அறை இருக்கிறது. அதற்குள் செல்கிறாள் சியோன். அங்கே பழைய டைரி ஒன்று அவளுக்குக் கிடைக்கிறது. 1999ல் யங் சூக் என்ற பெண்ணும் அவளின் வளர்ப்புத் தாயும் இந்த வீட்டில் வாழ்ந்திருக்கும் விஷயம் சியோனுக்குத் தெரிய வருகிறது. யங் சூக் ஓர் அனாதை. ஆவிகளுடன் தொடர்புகொள்ளும் ஒரு பெண்தான் அவளை வளர்த்து வந்தாள். யங்- சூக்கைப் பற்றி இணையத்தில் தேடிப்பார்க்கிறாள் சியோன். இருபது வருடங்களுக்கு முன் வளர்ப்புத் தாயாலேயே யங் சூக் கொல்லப்பட்ட தகவலை அறிந்து பயத்தில் நடுங்கிப்போகிறாள்.

ஆம்; சியோனிடம் போனில் பேசியது இறந்துபோன யங் சூக் தான். கடந்த காலத்திலிருந்து நிகழ்காலத்துக்கு போன் செய்திருக்கிறாள் யங் சூக். அப்போது மறுபடியும் தொலைபேசியில் அழைப்பு வருகிறது. சில வருடங்களுக்கு முன் தீ விபத்தில் இறந்துபோன உனது தந்தையை திருப்பித்தர உதவுகிறேன் என்று சொல்கிறாள் யங் சூக். அதை சியோனால் நம்ப முடியவில்லை.

அடுத்த சில நிமிடங்களில் தீ விபத்து நடந்த தேதிக்கு முன் சென்று விபத்தை நடக்காமல் தடுக்கிறாள் யங் சூக். இறந்துபோன சியோனின் அப்பா, வயதான தோற்றத்தில் திரும்பி வருகிறார். அப்பா இறப்பதற்கு காரணம் அம்மாதான் என்று நினைத்திருந்த அவளது மனது மாறுகிறது. நிகழ்காலத்தில் பெற்றோர்களுடன் மகிழ்ச்சியுடன் இருக்கிறாள் சியோன்.

மறுபடியும் கார்டுலெஸ் போன் ஒலிக்கிறது. ‘‘என்னைக் காப்பாற்றிக்கொள்ள அம்மாவைக் கொன்றுவிட்டேன்...’’ என்று பயமுறுத்துகிறாள் யங் சூக். அடுத்தடுத்து சில கொலைகள் செய்து சீரியல் கில்லராக உருவெடுக்கிறாள். கடந்த காலத்தில் யங் சூக் செய்யும் ஒவ்வொரு செயலும் நிகழ்காலத்தில் இருக்கும் சியோனின் வாழ்க்கையை எப்படியெல்லாம் புரட்டிப்போடுகிறது என்பதுதான் திரில்லிங் திரைக்கதை.

கொஞ்சம் கவனத்தை வேறுபக்கம் திருப்பினால் புரியாமல் போகும் ஒரு திரைக்கதையை மிக எளிமையாக படமாக்கியிருக்கிறது இதன் வெற்றி. சியோனாகவும் யங் சூக்காகவும் நடித்த பெண்கள் நடிப்பில் மிரட்டியிருக்கிறார்கள். இப்படத்தின் இயக்குனர் லீ சுங் ஹய்ன்.

படங்கள்: ஜி.சிவக்குமார்

Related Stories: