மண்வாசனை

ஸ்டார் ஹோட்டலில் போய் விதம்விதமா சாப்பிட்டாலும் கிராமத்து சமையலுக்கு உள்ள மவுசு இன்னும் குறையவில்லை. ஆட்டுக்கல்லில் மாவு அரைத்து இட்லி அவித்து, அம்மியில் அரைத்த  சட்னியைத் தொட்டுச் சாப்பிட்டால் அதற்கு ஈடு இணையே இல்லை. காரணம் எல்லாம் இயற்கை

மயம். நெல் மட்டுமல்லாமல் சட்னியில் சேர்க்கப்படும் தேங்காய், மிளகாய் என எல்லாமே இயற்கையாக விளைந்ததாக இருக்கும்போது அவற்றின் ருசியே தனிதான். தாத்தா பாட்டி காலத்தில் மாப்பிள்ளை சம்பா, பூங்கார், குள்ளக்கார் என்று விதம்விதமான அரிசி வகைகள் இருக்கும். இன்றைக்கு வெள்ளைவெளேர் என பட்டை தீட்டப்பட்ட அரிசிகளைத்தான்  நாம் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம்.

வெள்ளை என்றால் அது நல்லதாக இருக்கும் என்ற நம்பிக்கையில் வெள்ளையாக இருக்கும் அரிசிகளைச் சாப்பிடுகிறோம். ஆனால் அவற்றில் சத்துகளும் இல்லை, ருசியும் இல்லை... தினமும் சாப்பிடவேண்டும் என்ற கட்டாயத்தால் அவற்றை சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். இதனால் நாளடைவில் உடல் பருமன், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், ரத்த சோகை என பல்வேறுவிதமான நோய்கள் வந்து நம்மைக் கஷ்டப்படுத்துகின்றன என்பதே உண்மை. டாக்டர்களிடம் போய் பரிசோதித்துப் பார்த்தால் நம்மில் பலருக்கு நோய் எதிர்ப்பு சக்தி இல்லை என்கிறார்கள். பூச்சிக்கொல்லிகளையும் செயற்கை உரங்களையும் போட்டு வளர்த்த அரிசிகளைச் சாப்பிட்டால் நோய்கள் அணிவகுக்கத்தான் செய்யும். மாறாக, பழங்காலத்தில் உள்ள அரிசிகளைச் சாப்பிட்டால் நோய்கள் நெருங்காமல் பார்த்துக்கொள்ளலாம்.

நோய்கள் பெருகிவருவதை மனதில்கொண்டு பாரம்பரிய அரிசிகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்தப் பணியை சிறப்பாக செய்துவரும் மேனகா என்பவர் இயற்கை விவசாயமுறையில் விளைவிக்கப்பட்ட பாரம்பரிய அரிசிகளையும் அவற்றின் மருத்துவகுணங்களையும் நம்மிடம் பகிர்ந்துகொண்டார். சென்னை கோடம்பாக்கத்தில் 'மண்வாசனை’ என்ற பெயரில்  பாரம்பரிய அரிசி கள், சிறுதானியங்கள் விற்பனை செய்து வருகிறார். 2020- ம்ஆண்டு நமக்கு நிறைய பாடங்களைக் கற்றுத் தந்திருக்கிறது. புது நோயின் மூலகாரணம் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாததுவே. கொரோனா காரணமாக ஊரடங்கு போடப்பட்டிருந்த காலகட்டத்தில் நோய்கள் நெருங்காமல் இருக்க நாம் மறுபடியும் பாரம்பரிய உணவுப் பழக்கத்திற்கு மாறிவிட்டோம் என்று தான் சொல்லணும்.

அதற்கு முக்கிய பங்கு வகிப்பது, இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட அரிசி வகைகள், மூலிகைப்பொடிகள், மசாலாப் பொருட்கள் நம்முடைய உணவில் சேர்த்துக் கொள்வது. நாங்க ஒவ்ெவாரு உணவுப்பொருட்களையும் பாரம்பரிய முறையில் தயாரித்து தருகிறோம். கோடைக்காலத்தில் கருப்பு கவுனி அரிசியில் செய்யப்பட்ட ஐஸ்கிரீம் தயாரிக்கிறோம்’’ என்றவர் பாரம்பரிய அரிசியின் மருத்துவ குணங்களை பற்றி விவரித்தார். ‘‘பாரம்பரிய அரிசிகளில் கருப்பு கவுனி, சிவப்பு கவுனி, கருங்குருவை, குள்ளக்காரர், மாப்பிள்ளை சம்பா, இலுப்பைபூ சம்பா, மிளகு சம்பா, கருத்தக்கார் என்று நிறைய வகைகள் உள்ளன. இந்த அரிசிகளுக்கும் மற்ற அரிசிகளுக்கும் என்ன வேறுபாடு என்றால் நம் உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய்கள் வராமல் பாதுகாக்கும்.

உலகத்தில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் அரிசியை மாவுப்பொருளாக உபயோகிக்கின்றனர். இதனால் உடல் பருமன், நீரிழிவு நோய் வந்து இன்சுலின் எடுத்துக் கொள்ளும் அளவுக்கு நம் நாடு இரண்டாமிடத்தில் இருக்கிறது. தவிடு நீக்கிய அரிசியில் மாவுச்சத்து மட்டுமே காணப்படும். ஆனால் தவிடு நீக்கப்படாத அரிசியில் இரும்புச் சத்து, சுண்ணாம்பு சத்து, வைட்டமின் ஏ, பி, பி12, கே, இ மற்றும் மாவுச்சத்து, புரதச்சத்து போன்றவை உள்ளன. இந்த மாதிரியான பாரம்பரிய அரிசிகளில் செரிமானத்தன்மையும், இன்சுலின் ரத்தத்தில் கலக்கும் தன்மை மிக மெதுவாக இருக்கிறது. மேலும் இவற்றில் நார்ச்சத்தும் அதிக அளவில் உள்ளது. ‘அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு’ என்று ஒரு பழமொழி இருக்கிறது.

ஆனால் இந்த மாதிரியான அரிசிகளில் செய்த உணவுகளை நாம் அதிக அளவில் எடுத்துக் கொண்டாலும்கூட எந்தவிதமான பின் விளைவுகளும் ஏற்படாது. ஒரு முறை ஒரு விவசாயி என்னிடம்... மாம்பழத்தை அளவுக்கு அதிகமாகச் சாப்பிட்டால் கேடு விளைவிக்கும். ஆனால், அதேநேரம் அதன் உள்ளே இருக்கும் பருப்பையும் சேர்த்துச் சாப்பிட்டால் பின்விளைவுகள் இருக்காது என்றார். அளவுக்கு அதிகமாக பாலிஷ் செய்யப்பட்ட அரிசிகளில் பின்விளைவுகள் அதிகமாக இருக்கும். இந்த அரிசி வகைகள் கைக்குத்தல் அரிசிபோன்று பாரம்பரிய முறையில் உமி நீக்கப்படும்போது அதனால் பின்விளைவுகள் இருக்காது.

தவிடு நீக்கப்படாத அரிசிகளைப் பயன்படுத்துவதால், எளதில் செரிமானமாகும், மலச்சிக்கல் பிரச்சினைகளைப் போக்கும், ரத்தத்தைச் சுத்தப்படுத்தும், சிறுநீரகச் செயல்பாடுகளை நல்லமுறையில் பார்த்துக் கொள்ளும், நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும், உடலில் தேவையற்ற கழிவுகளை வெளியேற்றும், பெண்களுக்கு மாதவிடாய் சிக்கல்கள் வராது

* கருப்பு கவுனி அரிசி - இது மன்னர்கள் மட்டுமே சாப்பிட்ட அரிசி. இந்த அரிசி புற்றுநோய் வராமல் தடுக்கும். இன்சுலின் சுரப்பை அதிகப்படுத்தும்.

* மாப்பிள்ளை சம்பா - நரம்புகளையும் உடலையும் வலிமைப்படுத்தும். ஆண்மையை அதிகரிப்பதில் இதன் பங்கு அதிகம்.

* கருத்தக்கார் அரிசி சாப்பிட்டால் மூலம், மலச்சிக்கல் போன்றவை குணமாகும்.

* பூங்கார் அரிசி - கர்ப்பிணிகள் சாப்பிட்டால் சுகப்பிரசவமாகவும், குழந்தைப்பேற்றுக்கு பிறகு தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கவும் உதவும்.

* காட்டுயானம் அரிசி - நீரிழிவு நோய், மலச்சிக்கல் மற்றும் புற்றுநோயை குணப்படுத்தும்.

* அறுவதாங்குருவை அரிசி - எலும்பு சம்பந்தப்பட்ட நோய்களைப் போக்கும்.

* இலுப்பை பூ சம்பா - பக்கவாதம் மற்றும் மூட்டுவலியைக் குணப்படுத்தும்.

* கருங்குருவை அரிசி - இழந்த சக்தியை மீட்டுத் தரும்.

* கருடன் சம்பா - ரத்தத்தை சுத்தப்படுத்தும்.

* கார் அரிசி - குடல் வாய்வு மற்றும் குடல் புற்றுநோயை குணப்படுத்தும்.

* நீலம் சம்பா - ரத்த சோகையைக் குணப்படுத்தும்.

* சீரக சம்பா - உடலுக்கு அழகையும் ஆரோக்கியத்தையும் கொடுக்கும்.

* தூயமல்லி அரிசி - உடலில் உள்ள அனைத்து உறுப்புகளையும் பலப்படுத்தும்.

இது போன்ற பாரம்பரிய அரிசிகளை தேர்ந்தெடுத்து சாப்பிட்டால் ஆரோக்கியமாக வாழலாம். வளரும் தலைமுறைக்கு இப்போதிருந்தே பழக்கப்படுத்துங்கள்’’ என்ற மேனகா பாரம்பரிய அரிசியில் நூற்றுக்கும் மேற்பட்ட உணவுகளை தயாரித்து உலக சாதனை பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.

Related Stories: