முகக்கவச பரோட்டா, முகக்கவச நாண்

நன்றி குங்குமம் தோழி

கொரோனா பரவும் அச்சத்தால் பலர் ஒர்க் அட் ஹோம் என்ற முறைப்படி வீட்டில் இருந்த படியே வேலை செய்கின்றனர். இதனால் இல்லத்தரசிகளுக்கு கூடுதல் சுமைதான். குறிப்பாக வேலைக்கு செல்லும் கணவன் வீட்டில் இருந்தபடி பணி செய்வதால் வழக்கத்தை விட கூடுதலாக 2 வேளை காபி, சிற்றுண்டி என பெண்கள் செய்யவேண்டியுள்ளது. கூடவே பள்ளிக்கூடமும் விடுமுறை என்பதால் பிள்ளைகளுக்கு தேவையான தின்பண்டங்கள் என பெண்களுக்கு வேலை அதிகரித்து உள்ளது.  இது தவிர இந்த கொரோனா தொற்று காலத்தில் ஆன்லைனில் அதிகம் விற்பனையானது பிரியாணி என்கிறது சர்வே ஒன்று.

சரி விஷயத்துக்கு வருவோம். கடந்த ஜூலை மாதம் கொரோனா தொற்று மதுரையை அபகரித்திருந்த நேரத்தில் அங்கு மாட்டுத்தாவணி பஸ் நிலையம் அருகேயுள்ள ஒரு ஓட்டல் நிர்வாகம் மாஸ்க் வடிவில் பரோட்டா செய்து விற்பனை செய்தது. அது கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதாக அமைந்தது. இதை போல் தற்போது ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரை சேர்ந்த வேதிக் மல்டி குசைன் ரெஸ்டாரண்ட் ஸ்பெஷல் கோவிட் நாண் கறியை விற்பனை செய்கிறது.

முழுக்க முழுக்க வெஜிடேரியன் ஓட்டலான இதில் சிறப்பு உணவாக நாண் உள்ளது. இந்த நாணை மாஸ்க் வடிவில் உருவாக்கி அசத்தியுள்ளனர். இதற்கு சைடிசாக வழங்கப்படும் கறி கொரோனா வைரஸ் போல் தோற்றம் கொண்டதாக உள்ளது. ஜெயின் மக்களின் விருப்ப உணவான மலாய் கோப்டா கறியை தான் இவ்வாறு வடிவமைத்து விற்பனை செய்கிறார் அதன் உரிமையாளர் அனில் குமார்.

இந்த நாண் ரூ.40க்கும், கோவிட் கறி ரூ.220க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த கோவிட் கறியில் மேலே கொரோனா வைரசை அடையாளம் காட்டும் விதமாக முட்கள் போன்று உள்ளது. இப்போது ராஜஸ்தான் மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்ற உணவாக இந்த நாண் கறி உள்ளது. ‘‘ஏதோ எங்களால் முடிந்த விழிப்புணர்வை இந்த உணவு மூலம் ஏற்படுத்தி வருகிறோம். வழக்கமான உணவை விடஇந்த புது டிசைன் உணவுக்கு  ஊரடங்கிலும் ஏகப்பட்ட கிராக்கி இருக்கிறது’’ என்கிறார் கடை உரிமையாளர் அனில் குமார்.

தொகுப்பு: கோமதி பாஸ்கரன்

Related Stories: