நன்றி குங்குமம் தோழி
''பெண்கள் ஏன் மெட்டி அணிகிறார்கள்?’’ என்று ஐந்து வயது குழந்தையான புல்புல் தன் அத்தையிடம் கேள்வி கேட்கிறாள். அதற்கு ‘‘நம் கால் விரலில் ஒரு நரம்பு இருக்கும். அதை மெட்டி போட்டு அழுத்தாமல் விட்டால், பெண்கள் பறந்து போய்விடுவார்கள்’’ என்று அத்தை பதில் அளிப்பார். ‘‘பறவையைப் போலவா?’’ என்று பதிலுக்கு புல்புல் கேள்வி கேட்க... ‘‘இல்லை. பெண்களை கட்டுப்படுத்தவே அணிவிக்கப்படுகிறது” என்று அத்தை சொல்கிறாள். 1881 ஆம் ஆண்டு பெங்காலில் தொடங்குகிறது கதை. மரமேறி மாங்காய் பறித்து விளையாடிக் கொண்டிருக்கிறாள் ஐந்து வயதாகும் புல்புல். அவளுக்கு பட்டுச்சேலை உடுத்தி அலங்காரம் செய்கிறார் அவளது அத்தை. புல்புல் தூங்கி விழிக்கும் போது திருமணமாகி பல்லக்கில், புகுந்த வீடு சென்றுகொண்டிருக்கிறாள். தன் தந்தை வயதை ஒத்த பணக்கார ஜமீன்தார், இந்திரனில் தாக்கூரின் மனைவியாக மாளிகையில் வசிக்கிறாள். அங்கு இந்திரனிலின் மனநலம் பாதிக்கப்பட்ட இரட்டை சகோதரன் மகேந்திராவும், அவன் மனைவி பினோதினியும் வசிக்கின்றனர். மேலும், தாக்கூரின் இளைய சகோதரனான சத்யாவும் வசிக்கிறான். புல்புல்லும் சத்யாவும் ஒரே வயதுடையனர் என்பதால் உடனே நட்பு மலர்கிறது. இருவரும் பேய் கதைகள் பேசி கண்ணாமூச்சி ஆடி ஒன்றாக வளர்கின்றனர்.
புல்புல், சத்யா மீது அதீத அன்புடன் வளர்கிறாள். இருவரும் ஒன்றாக கதை எழுதுகின்றனர். சத்யா முதல் பாதியை முடித்து, இரண்டாம் பாதியை புல்புல் எழுதி முடிக்க தருகிறான். இந்திரனில் இவர்களது அன்பைக் கண்டு பொறாமையில் சந்தேகப்பட்டு சத்யாவை வெளிநாட்டிற்கு அனுப்ப முடிவு செய்கிறான். புல்புல் இதை தாங்கமுடியாமல், சத்யாவை போகவேண்டாம் எனத் தடுக்கிறாள். ஆனால், சத்யா தினம் கடிதம் எழுதுவதாக சத்தியம் செய்து புறப்படுகிறான். ஐந்து ஆண்டுகள் லண்டனில் படிப்பை முடித்து, ஊருக்கு திரும்புகிறான் சத்யா. ஊரில் சில ஆண்டுகளாக நடக்கும் தொடர் கொலைகள் பற்றி அறிகிறான். மகேந்திரன் இறந்து போக, பினோதினி விதவைகளுக்கான இல்லத்தில் வசிக்கிறாள். தன் கணவனைக் கொன்றது ‘சுடேயில்’ (சூனியக்காரி) என்கிறாள் பினோதினி. இந்திரனில் ஊரைவிட்டு வெளியேறிவிட புல்புல் இப்போது மாளிகையை தனியாக ஆள்கிறாள். குறும்பு சிரிப்புடன் பேய் கதைகள் பேசி தன்னையே சுற்றி வந்த புல்புல், இப்போது ஊர் மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் அளவிற்கு மாறியிருப்பது சத்யாவிற்கு ஆச்சரியமாக இருக்கிறது. உடனே, புல்புல்லிடமிருந்து அனைத்து பொறுப்புகளையும் பறிக்கிறான். புல்புல் புன்சிரித்து நகர்ந்து போகிறாள்.