சென்னை: சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை 108 ஆம்புலன்ஸ்கள், தனியார் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்வதாக கூறப்படும் புகார் குறித்து விசாரணை நடத்துமாறு சிறப்பு புலனாய்வு குழுவிற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மோட்டார் வாகன விபத்து தொடர்பாக போலி காப்பீடு கோரிய விவகாரம் தொடர்பாக விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 2021ல் உத்தரவு பிறப்பித்திருந்து.
இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிட்ட பிறகு ஓசூரில் உள்ள மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் தீர்ப்பாயத்தில் 11 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பிலான 84 வழக்குகள் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக நீதிபதியிடம் தெரிவிக்கப்பட்டது.