தாம்பரம்: முடிச்சூர் லட்சுமி நகர் 2வது பிரதான சாலையில் உள்ள ரேஷன் கடை நேற்று முன்தினம் இரவு திறக்கப்பட்டு அங்கிருந்து ரேஷன் அரிசி மூட்டைகள் சரக்கு வாகனத்தில் ஏற்பட்டது. இதை அப்பகுதி மக்கள் பார்த்து ஊழியர்களிடம் கேட்க சென்றனர். அப்போது, அங்கிருந்து அவர்கள் தப்பிச்செல்ல முயன்றனர். தொடர்ந்து ரேஷன் கடை ஊழியர்கள் மற்றும் வாகன ஓட்டுனர் ஆகியோரை பொதுமக்கள் பிடித்து பீர்க்கன்காரணை போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் போலீசார் பிடிபட்டவர்களை தென் சென்னை குடிமைபொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், ரேஷன் கடை ஊழியர்கள் கோமதி மற்றும் சஞ்சீவி ஆகியோரின் உதவியுடன் 2 டன் அரிசி மூட்டைகள் வெளி மாநிலங்களுக்கு விற்பனை செய்ய கடத்த இருந்தது தெரியவந்தது. இதையடுத்து ரேஷன் கடை ஊழியரான கோமதி, சரக்கு வாகன உரிமையாளர் ராகுல்ராஜ், அரிசி மூட்டைகளை கடத்திய ராஜேந்திர பாண்டியன், பொன்சங்கர நாராயணன் ஆகியோரை கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள சஞ்சீவியை போலீசார் தேடி வருகின்றனர்.