கொரோனா பரவலை குறைக்கும் சூயிங் கம் :விஞ்ஞானிகள் புதிய கண்டுபிடிப்பு

வாஷிங்டன்: அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழக ஆய்வாளர் ஹென்றி டேனியல் தலைமையிலான குழு உருவாக்கிய இந்த சூயிங் கம் குறித்த ஆய்வறிக்கை மாலிகுலர் தெரபி இதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஆய்வாளர் ஹென்றி கூறியிருப்பதாவது: ‘முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் கூட மீண்டும் கொரோனாவால் பாதிக்கப்படலாம், அவர்கள் வைரசை மற்றவர்களுக்கு பரப்பலாம். இதை கட்டுப்படுத்த உதவும் வகையில் சூயிங் கம் உருவாக்கி உள்ளோம். பொதுவாக, கொரோனா வைரஸ் மனிதர்களின் உமிழ்நீர் சுரப்பிகளில் பிரதி எடுத்து பெருகுகிறது. எனவே பாதிக்கப்பட்ட நபர் தும்மும் போதும், இருமும் போதும் அல்லது பேசும் போதும் அந்த வைரஸ் சிலவற்றை வெளியேற்ற மற்றவர்களுக்கு பரவுகிறது.

நாங்கள் உருவாக்கி உள்ள இந்த சூயிங் கம், உமிழ்நீரில் உள்ள வைரசை அழித்து, அதன் பரவலை தடுக்கிறது. மனித உடலில் சுவாச செல்களில் காணப்படும் ஏசிஇ2 என்ற என்சைம் உடன் கொரோனா வைரசின் முள் பகுதிகள் ஒட்டிக் கொண்டு மனித உடலுக்குள் நுழைகின்றன. எனவே ஏசிஇ 2 என்சைமை கொரோனா வைரஸ் கரைக்க முடியாத படி வலுவாக்கினால் மனித உடலில் வைரஸ் பரவுவதை தடுக்கலாம். எனவே, தாவரத்தின் மூலம் உருவாக்கப்பட்ட ஏசிஇ-2 என்சைம்களுடன் சூயிங் கம் உருவாக்கி உள்ளோம். ஏசிஇ2 புரதங்கள் உட்செலுத்தப்பட்ட சூயிங்கம்மால் வாய்வழி குழியில் உள்ள வைரசை செயலிழக்க செய்ய முடியும். மனிதர்களுக்கு இந்த சூயிங்கம் கொடுத்து பரிசோதனை வெற்றிகரமானால், கொரோனா நோயாளிகளுக்கும், அவர்களை பாதுகாப்பவர்களுக்கும் இத்தகைய சூயிங் கம் கொடுத்து வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியும்’ என்றார்.

Related Stories: