வீட்டிற்கே வந்து சலவை செய்யப்படும்!!

நன்றி குங்குமம் தோழி

நம் முன்னோர் காலத்தில் துணிகளை எல்லாம் மூட்டையாக கட்டிக் கொண்டு ஆத்தங்கரை ஓரமாக அதனை துவைப்பது வழக்கமாக இருந்தது. கொஞ்சம் வசதி படைத்தவர்கள் அந்த கிராமத்தில் இருக்கும் சலவைத் தொழிலாளியிடம் துணிகளை துவைக்க கொடுப்பது வழக்கம். இது காலப்போக்கில் மாறி இப்போது சலவை தொழில் ஹைட்டெக்காக உருமாறி வருகிறது.

தெருவுக்கு ஒரு லாண்டரி கடை இருந்த காலம் மாறிப்போய், ஒரு விரல் நுணியில் உங்களின் விருப்பப்படி சலவையை செய்துகொள்ளும் வசதி வந்துவிட்டது. அதாவது தொழில்நுட்ப வளர்ச்சியால் நீங்கள் இனி சலவை கடையினை தேடிச் செல்ல அவசியமில்லை. வீட்டில் இருந்தபடியே அதனை பெற முடியும். அதற்காகவே சில ஆப்கள் உள்ளன. அவை என்ன? அவற்றின் சேவை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

கெட்வாஷ் லாண்டரி

இந்த லாண்டரி 25 வருடங்களுக்கு முன் சவுதி அரேபியாவில் தொழிலதிபர் ஒருவரால் துவங்கப்பட்டது. 2009ம் ஆண்டு இந்தியாவிற்கு வந்தவர் இங்கும் தன் நண்பருடன் இணைந்து சலவைத் தொழிலை துவங்கினார், கொஞ்சம் தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி. அதன் பிறகு சென்னையில் இதன் கிளைகள் சிறகு விரித்து பறக்க துவங்கியது.

உங்களின் துணியின் காவலன் கெட்வாஷ் என்று சொல்லலாம். வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப இவர்கள் எல்லா விதமான சேவைகளையும் செய்து தருகிறார்கள். தரம் தான் இவர்களின் தாரக மந்திரம். சென்னை மக்களுக்கு மட்டுமே இந்த சேவை என்பதால், இவர்கள் அவர்களை வலைத்தளத்தில் பதிவு செய்தால் போதும். வீடு தேடி வந்து துணிகளை பெற்றுக் கொண்டு அதனை தரமாக சலவையும் செய்து தருகிறார்கள்.

கடந்த பல ஆண்டுகளாக இவர்கள் ெதாழில் செய்து வருவதால், இவர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் ஒரு நல்ல உறவு முறை உள்ளது. வீட்டுக்கு மட்டும் இல்லாமல் மருத்துவமனை, தொழிற்சாலை என பலதரப்பட்ட துறைகளுக்கு ஏற்ப மிகவும் நியாயமான விலையில் சலவை செய்து தருவது தான் இவர்களின் தனிச்சிறப்பே. இவர்களை அணுகுவது மிகவும் சுலபம். கெட்வாஷ் ஆப்பினை டவுண்லோட் செய்யவும், சலவைக் குறித்து குறிப்பிடவும். வீட்டிற்கே வந்து துணிகளை எடுத்துச் சென்று சலவை செய்து மறுபடியும் உங்கள் வீட்டிற்கே கொண்டு வந்து கொடுத்திடுவார்கள்.

டோபிலைட்

குர்கான், நொய்டா, தில்லி, துவாரகா, லக்னோ, இந்திராபுரம் போன்ற பகுதியில் செயல்பட்டு வந்த டோபிலைட் தற்போது பெங்களூரூ, நாசிக், பூனா, ஐதராபாத், போபால், சென்னை, ஜெய்பூர், குஜராத், கொச்சி, சூரத் போன்ற நகரங்களுக்கும் தங்களின் சலவை தொழிலை துவங்கியுள்ளது. நியாயமான விலையில் தரமான சேவையை டோபிலைட் செய்து தருகிறது. இப்போது உள்ள அவசர காலத்தினை கணக்கில் கொண்டு 24 மணி நேரத்திலேயே உங்களின் சலவை துணியினை டெலிவரி செய்யும் படி அமைக்கப்பட்டுள்ளது.

ஆர்டர் அளித்த அடுத்த வினாடி உங்கள் வீடு தேடி வரும் சேவை என்பது மட்டும் இல்லாமல், எந்த துணியினை எவ்வாறு சலவை செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டு அதன் படி துல்லியமாக செய்து தருவதில் இவர்கள் சிறந்தவர்கள். சலவைக்கு உயர் ரக பொருட்கள் மட்டுமே பயன்படுத்தப்படுவதால், துணிகளுக்கு எந்தவிதமான பாதகங்களும் ஏற்படாது.

இதை பயன்படுத்துவதும் எளிது. உங்க செல்போனில் இந்த ஆப்பினை டவுண்லோட் செய்யவும். பிறகு எப்போது எந்த நேரம் வந்து துணிகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்று குறிப்பிடவும். அவ்வளவு தான். இதற்கான கட்டணத்தையும் நீங்கள் ஆன்லைன் முறையிலும் செலுத்தலாம்.

பிக் மை லாண்டரி

உங்க கைபேசியினை எடுங்கள், அதில் சலவைக்கான துணிகளை எடுத்துச் செல்ல வேண்டிய நாள் மற்றும் நேரத்தை குறிப்பிடுங்கள். அதன் பிறகு உங்கள் விலாசத்தை பதிவு செய்யுங்கள், கட்டணத்தை செலுத்தியவுடன் நீங்கள் குறிப்பிட்ட தேதியில் உங்கள் துணிகளை சலவைக்காக பெற்றுக் கொள்ள ஆட்கள் வந்திடுவார்கள்.

இதில் இரண்டு வசதியுள்ளது. எக்ஸ்பிரஸ் சேவை என்றால் 24 மணி நேரத்தில் சலவை செய்யப்பட்டு துணி உங்கள் வீட்டிற்கு வந்தடையும். சாதாரண சேவை என்றால், இரண்டு நாட்களில் செய்து தரப்படும். தற்போது பெங்களூரூ, குர்கான், நொய்டா, இந்திராபுரம் மற்றும் தில்லியில் மட்டுமே இயங்கி வருகிறது.

கிளியர் டிரை

இதில் நான்கு விதமான சேவைகள் உள்ளன. அது எது என்று உங்களின் தேவைக்கு ஏற்ப தேர்வு செய்து கொள்ளலாம். சிலர் துணிகளை மட்டுமே சலவை செய்வார்கள். ஒரு சிலர் வீட்டில் உள்ள சோபா மற்றும் கார்பெட் அனைத்தையும் சலவை செய்வதை வழக்கமாக கொண்டிருப்பார்கள். அவரவரின் தேவை என்ன என்று அறிந்து அதற்கு ஏற்ப செய்து தருவது தான் கிளியர் டிரைஇதன் பயன்பாடு மிகவும் எளிது.

செல்போனில் முதலில் இந்த ஆப்பினை டவுண்லோட் செய்ய வேண்டும். அதன் பிறகு உங்களின் செல்போனை அதில் பதிவு செய்யுங்கள். அடுத்து துணிகளின் எண்ணிக்கை மற்றும் ரகம் குறிப்பிட்டால் போதும், கிளியர் டிரை ஆட்கள் அதனை பெற்றுக் கொண்டு சலவை செய்து புதிது போல் உங்களிடமே கொண்டு வந்து சேர்த்துவிடுவார்கள்.

லாண்டரி பாஸ்கெட்

சலவை என்றால் அதில் சுகாதாரம் மிகவும் முக்கியம். பொதுவாக நாம் வீட்டில் துணிகளை துவைக்கும் போது, பல துணிகளை எல்லாம் ஒன்றாக ேசர்த்து துவைப்பதில்லை. அதே போல் தான் சலவை செய்யப்படும் உடைகளும் இருக்க வேண்டும் என்று நினைப்பது வழக்கம். அதன் சேவையை இந்த லாண்டரி பாஸ்கெட் ஆப் பூர்த்தி செய்கிறது. உங்களின் ஒவ்வொரு துணிகளுக்கும் தனிப்பட்ட முறையில் சலவை செய்து தரப்படுகிறது.

குறிப்பாக நிறம் மற்றும் வெள்ளைத் துணிகள் எதுவாக இருந்தாலும் அதன் ரகம் மற்றும் தரம் பிரிக்கப்பட்டு சலவை செய்யப்படுகிறது. தற்போது பெங்களூர், ஐதராபாத், கொச்சி போன்ற நகரங்களில் மட்டுமே இதன் சேவை இயங்கி வருகிறது. இதில் சலவை செய்வது மட்டும் இல்லாமல், நன்றாக அயர்ன் செய்யப்பட்டு மடித்தும் தரப்படுவதால், துணிகள் புதிது போல் பளபளப்பாகிறது.

கார்த்திக் ஷண்முகம்

Related Stories: