தேர்தலில் கவனம் ஈர்த்த பெண்கள்

நன்றி குங்குமம் தோழி

2019 உள்ளாட்சித் தேர்தலில் பெண்கள் பலரும் வயது வித்தியாசமின்றி வெற்றிபெற்று முத்திரை பதித்துள்ளனர். அரசியல் பின்புலம் கொண்ட பெண்கள் மட்டுமே அரசியலுக்கு வர முடியும்... பெண்களுக்கு அரசியல் வேண்டாம் என்றுஒதுங்கிய நிலையில் இன்று மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது.

தமிழகத்தில் 27 மாவட்டங்களுக்கு உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டு முடிவுகள் வெளியாகின. மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்,  ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்,  ஊராட்சித் தலைவர்,  ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்காக 27 மாவட்டங்களில் உள்ள 91 ஆயிரத்து 975 பதவிகளுக்கு தேர்தல் நடந்தது. 2 லட்சத்து 31 ஆயிரத்து 890 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.  இதில் கல்லூரி மாணவியில் துவங்கி வயதாள மூதாட்டிகள் வரை தேர்தல் களத்தில் தைரியமாக போட்டியிட்டு வெற்றி வாகை சூடியுள்ளனர். இதில் திருநங்கை மற்றும் மாற்றுத் திறனாளிகளும் அடக்கம்.

21 வயது கல்லூரி மாணவி சந்தியா ராணி தன்னை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளரை 108 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து ஊராட்சி மன்றத் தலைவராகி உள்ளார். பி.பி.ஏ. இறுதியாண்டு படிக்கும் இவர், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகில் சூளகிரி ஒன்றியத்துக்கு  உட்பட்ட கே.என்.தொட்டி ஊராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார். தான் சந்தித்த முதல் தேர்தல் தந்த வெற்றியில், ஊடகத்தைச் சந்தித்த இவர், தன்னை நம்பி வாக்களித்த மக்களின் தேவைகளை முடிந்தவரை செய்வேன் எனத்

தெரிவித்தார்.

22 வயது நிறைந்த சுபிதா 499 வாக்குகள் பெற்று பஞ்சாயத்துத் தலைவராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.  திருவள்ளூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி யூனியனுக்கு உட்பட்ட பூசலங்குடி பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட்டு இவர் வெற்றி பெற்றிருக்கிறார். மார்க்சிஸ்ட்

கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவ அமைப்பான AISF யிலும் உறுப்பினராக இருக்கிறார்.

விருதுநகர் மாவட்டம் வில்லிபுத்தூர் அருகே கான்சாபுரம் பஞ்சாயத்தில் துப்புரவு பணியாளராக பணியாற்றிய சரஸ்வதி உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு வென்று பஞ்சாயத்து தலைவராகப் பதவி ஏற்றுள்ளார். உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்காகவே தனது அரசு வேலையை ராஜினாமா செய்து அசத்தியவர் இவரென்பது குறிப்பிடத்தக்கது.

 நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றிய 2வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு, திமுக சார்பில் போட்டியிட்டவர் 35 வயது திருநங்கை ரியா. இவர்  2,701 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். திருநங்கை ஒருவர் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றது இதுவே முதன் முறை. மக்கள் பிரச்னைகளை போக்க தொடர்ந்து பாடுபடப் போவதாக இவர் தெரிவித்துள்ளார்.

பட்டியல் இனத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரியைச் சார்ந்த 6 பேர், பொதுமக்களில் 7 பேர் என மொத்தம் பதிவான 13 வாக்குகளில் 10 வாக்குகளைப் பெற்ற ராஜேஸ்வரி ஊராட்சித் தலைவராக வெற்றி பெற்று இருக்கிறார். திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பிச்சிவிளை ஊராட்சித் தலைவர் பதவி, பட்டியல் இனத்தவருக்கு தனித் தொகுதியாக அறிவிக்கப்பட்டது. இந்த இடஒதுக்கீட்டுக்கு அந்த ஊர் மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து, தேர்தலை புறக்கணித்து யாரும் வாக்களிக்கவில்லை.

பட்டியல் இன சமூகப் பின்னணி கொண்ட 21 வயதாகும் சரண்யா குமாரி உடுமலை அரசு கலை கல்லூரியில் முதுகலை முதலாம் ஆண்டு மாணவி. மாற்றுத்திறனாளியான இவர், கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆத்து பொள்ளாச்சி ஊராட்சியின் வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டு தனது வெற்றியைப் பதிவு செய்துள்ளார். தினக்கூலி வேலைக்கு செல்லும் பெற்றோர், எந்த அடிப்படை வசதிகளும் இல்லாத தலித் குடியிருப்பு, தனது கடினமான பொருளாதார நெருக்கடி இவற்றுக்கு நடுவே கல்லூரிப் படிப்பு, கிடைக்கும் நேரத்தில் சமூக செயல்பாடு எனவும் செயல்பட்டு வருகிறார்..

 82 வயது விசாலாட்சி  3,069 வாக்குகள் பெற்று  திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மேட்டுப்பாளையம் பகுதி ஊராட்சித் தலைவராகத் தேர்வாகியுள்ளார். 79 வயதான வீரம்மாள் தம்மை எதிர்த்துப் போட்டியிட்ட வேட்பாளரைவிட 195 வாக்குகள் அதிகம் பெற்று, மேலூர் ஊராட்சி ஒன்றியம் அரிட்டாபட்டி ஊராட்சி மன்றத் தலைவராக வெற்றி பெற்று வெற்றிச் சான்றிதழைப் பெற்றார்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஒன்றியத்திற்கு உட்பட்ட அ.தரைக்குடி ஊராட்சி மன்றத்தின் தலைவராக 73 வயது மூதாட்டி தங்கவேலு

போட்டியிட்டு வெற்றிக் கனியைப் பறித்திருக்கிறார் உள்ளாட்சி அமைப்புகளில் முதல்முறையாக 50 சதவீத இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டு, கிராம நிர்வாகத்தில் பெண்களின் பங்கேற்பு அதிகரிக்கும் தேர்தலாக 2019 உள்ளாட்சி தேர்தல் அமைந்துள்ளது.

பெண்களும் தைரியமாக முன்வந்து அரசியல் களம் காண வேண்டும் என்பதற்கு இவர்களே சான்று.தேர்தலில் வெற்றி பெற்ற பெண்களுக்குப் பின்னால் தந்தையோ, கணவரோ, உடன் பிறந்தவர்களோ, மகனோ இருந்து கையொப்பம் மட்டும் இடும் கைப்பாவைகளாக திகழாமல், ஆளுமைத் திறன்

கொண்டவர்களாக இவர்கள் மாற வேண்டும்.

மகேஸ்வரி நாகராஜன்

Related Stories: