வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டில் காலி இடங்கள் இருந்தால் ஓபிசி மாணவர்கள் மூலம் நிரப்பலாம்: உயர்க்கல்வித்துறை அறிவிப்பு

சென்னை: வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டில் காலி இடங்கள் இருந்தால் ஓபிசி மாணவர்கள் மூலம் நிரப்பலாம் என்று உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. ஒரு பிரிவில் ஏற்படும் காலியிடங்களை மற்றோர் பிரிவினர் மூலம் சுழற்சி முறையில் நிரப்ப அரசு அனுமதி அளித்துள்ளது. தென்மாவட்டங்களில் 10.5% இட ஒதுக்கீடு இடங்கள் காலியாக இருந்தால் பிற பிரிவினர் மூலம் நிரப்ப அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் இட ஒதுக்கீடு அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெறும் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.

மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கையில் காலி இடங்களில் மறு ஒதுக்கீடு செய்யப்படும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவில் வன்னியர்களுக்கு 10.5 சதவீதமும், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 7 சதவீதமும், மிகவும் பிற்படுத்தப்பட்ட இதர பிரிவுகளுக்கு 2.5 சதவீதமும் மொத்தம் 20 சதவீதம் பிரித்து கொடுக்கப்பட்டது.

இந்த நிலையில் தென் மாவட்டங்களில் உள்ள பெரும்பான்மையான கல்வி நிறுவனங்களில் வன்னியர்கள் இட ஒதுக்கீட்டில் அதிகமாக மாணவர்கள் இல்லாத தகவல் வந்ததின் அடிப்படையில் இந்த காலி இடங்களை மற்ற எம்பிசி மாணவர்களுக்கு பிரித்து கொடுப்பதற்கான அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு தற்போது அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

Related Stories: