மின் துறை குறித்து பொய் புகார் ஆதாரத்தை காட்டுங்கள்... அல்லது மன்னிப்பு கேளுங்கள்: அண்ணாமலைக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி சவால்

சென்னை:சென்னையில் நேற்று முன்தினம் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி அளித்தார். அப்போது, மின்வாரிய துறையில் முறைகேடு நடந்துள்ளது குறித்து தன்னிடம் ஆதாரம் உள்ளது என்று கூறும் பாஜ மாநில தலைவர் அண்ணாமலை எப்போது எங்கு வெளியிட்டாலும் அங்கு நான் வர தயார். அதுமட்டுமின்றி தன்னிடம் உள்ள ஆதாரங்களை 24 மணி நேரத்தில் வெளியிட வேண்டும் என்றும், அப்படி இல்லையென்றால் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் கூறினார். இதையடுத்து, அண்ணாமலை நேற்று தனது டிவிட்டர் பக்கத்தில், கான்ட்ராக்டர்களுக்கு வழங்கப்பட்ட பணம் என்று கூறி மின்சார வாரியத்தில் இருந்து அதன் செயற் பொறியாளர்களுக்கு பணம் அனுப்பப்பட்ட விவரத்தின் ஸ்கிரீன் ஷாட்டை நேற்று பகிர்ந்தார்.

இதையடுத்து, அமைச்சர் செந்தில் பாலாஜி டிவிட்டரில் அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்துள்ளார். அதில், மின்வாரிய துறையில் முறைகேடு நடந்துள்ளதென அண்ணாமலை கூறியதற்கு ஆதாரத்தை கேட்டால், வாரிய அலுவலகத்திற்கு அனுப்பிய நிதியை, யாருக்கு அனுப்பியது என்பது தெரியாமல், திருட்டுத்தனமாக எடுக்கப்பட்ட அந்த கோப்பு கையில் இருந்தும், அந்த தொகையையும் 29.99 கோடி என சரியாக எழுத கூட தெரியாமல் பதிவிட்டுள்ளதாக கிண்டல் செய்துள்ளார். மேலும்,  2021 மார்ச் மாதம் முதல் 6.5.2021 வரை, மின் கொள்முதல், தளவாட கொள்முதல் மற்றும் ஒப்பந்ததாரர்களுக்கு சேர வேண்டிய ரூ.15,541 கோடி நிலுவையில் இருந்தது.

கடந்த அக்டோபர் 1ம் தேதி பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷன், ஊரக மின்மயமாக்கல் கார்ப்பரேஷன் ஆகிய ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனங்களிடம் இருந்து நிதி வந்தது.  பின், தலைமை நிதி கட்டுப்பாட்டு அலுவலகத்தில்  நிலுவை தொகைகள் சரி பார்க்கப்பட்டு, அந்தந்த மின் பகிர்மான மற்றும் மின் உற்பத்தி வட்டத்திற்குரிய மேற்பார்வை மற்றும் தலைமை பொறியாளர்கள் அலுவலக வங்கி கணக்குகளுக்கு பணம் அனுப்பப்பட்டது. பின்னர் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது. இதுவே வழக்கமான நடைமுறை. அதிமேதாவியாக எண்ணி, மீண்டும் பொய் புகார் கூறி திமுக ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்த பார்க்கும் அண்ணாமலை புதிய புகாருக்கான ஆதாரத்தையும் இன்றே வெளியிட வேண்டும். இல்லை, அவர்களது வழக்கப்படி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி சவால் விடுத்துள்ளார்.

Related Stories: