ஒரே பெண்ணின் மீது இருவர் காதல்!: கோவில்பட்டியில் பட்டப்பகலில் டிவி மெக்கானிக் தலை துண்டித்து கொடூர கொலை..!!

தூத்துக்குடி: கோவில்பட்டி அருகே ஒரே பெண்ணை இருவர் காதலித்த விவகாரத்தில் பட்டப்பகலில் டிவி மெக்கானிக் தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் புதூர் குமாரகிரியை சேர்ந்தவர் 31 வயதான சூர்ய ராகவன். எட்டயபுரத்தில் டிவி மெக்கானிக் கடை நடத்தி வந்தார். இன்று காலை வழக்கம் போல் சூர்ய ராகவன், கடையை திறந்து வேலை செய்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர், சூர்ய ராகவன் மீது மிளகாய் பொடியை தூவி தலையை துண்டித்து கொடூரமாக கொலை செய்துவிட்டு தப்பி சென்றுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த எட்டயபுரம் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி உடற்கூராய்விற்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்ட சூர்ய ராகவனும், சோழபுரம் கிராமத்தை சேர்ந்த ஆனந்தராஜ் என்பவரும் மஹாலட்சுமி என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளனர். இதில் சூர்ய ராகவனை அந்த பெண் 2 மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்துகொண்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஆனந்தராஜ், சூர்ய ராகவனை பழிவாங்க திட்டமிட்டிருக்கிறார். அதன்படி இன்று காலை சூர்ய ராகவனை, ஆனந்தராஜ் கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக எட்டயபுரம் போலீசார் வழக்கு பதிந்து கொலையாளியை தேடி வருகின்றனர்.

Related Stories: