மதுரை நிதிநிறுவன அதிபர் ரூ.200 கோடி மோசடி: ஜாமீன் கையெழுத்து போட சென்றவர் கடத்தி கொலை

மதுரை: மதுரை எல்லீஸ் நகர் கென்னட் ரோட்டை சேர்ந்த முகமது அனீஷ் கமால் (49). மனைவி ஷாம் பாத்திமா (43), மகன்கள் அலிஷாம், ஆசீம். இவர்  ‘ஜீ கேர் கிரிப்டோ கரென்ஸி கிரீன் டெக்’ என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி வந்துள்ளார். இதில் மதுரை மற்றும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் முதலீடு செய்தனர். அவர்கள் செலுத்திய பணத்திற்கு வட்டியுடன் இரட்டிப்பாக பணம் தருவதாக கூறியுள்ளார். இதனால் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் சுமார் ரூ.200 கோடிக்கு மேல் முதலீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் திடீரென தனது நிதி நிறுவனத்தை மூடி விட்டார். பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகார்களின்பேரில், முகமது அனீஷ் கமால் மீது மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் மோசடி வழக்கு பதிவு செய்தனர். அனீஷ் கமால் உட்பட 5 பேரை கைது செய்து, சிறையில் அடைத்தனர். கடந்த 2 மாதத்திற்கு முன்பு ஜாமீனில் வெளி வந்த அனீஷ் கமால், பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் தினமும் ஆஜராகி கையெழுத்து போட்டு வந்தார்.

நேற்று முன்தினம் காலை 9 மணிக்கு பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் கையெழுத்து போட்டு விட்டு சென்றுள்ளார். அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. குடும்பத்தினர் பல இடங்களில் தேடினர். கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து அவரது மனைவி ஷாம் பாத்திமா, ‘தனது கணவரை காணவில்லை என எஸ்.எஸ்.காலனி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், அவர் படுகாயங்களுடன் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி நேற்று இறந்துள்ளார் என்ற செய்தி வெளியானது. நேற்று முன்தினம் காலை, ஜாமீன் கையெழுத்து போட்டு விட்டு திரும்பிய அவரை, மர்ம கும்பல் கடத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் சிவகிரியில் அவரை ஒரு வீட்டில் அடைத்து வைத்து, கும்பல் சரமாரியாக தாக்கியுள்ளது. இதில் படுகாயமடைந்த அவரை, கடத்தல் கும்பலுடன் தொடர்புடைய ஒருவர், தென்காசி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து, சிகிச்சைக்காக சேர்த்துள்ளார் என்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அனீஷ் கமாலின் மோசடியால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள்தான் அவரை கடத்தி சென்று கொலை செய்திருக்க வேண்டும் என்ற கோணத்தில் போலீசார், இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் மீது புகார் கொடுத்தவர்களின் பட்டியலை எடுத்து, அதில் உள்ளவர்களின் பின்னணி குறித்து தற்போது விசாரணையை துவக்கியுள்ளனர்.

Related Stories: