காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 5529 உள்ளாட்சி பிரதிநிதிகள் இன்று பதவியேற்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 4 கிராம பஞ்சாயத்து தலைவர்கள், 145 கிராம ஊராட்சிக்குழு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மற்ற 11 மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள், 98 ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள், 270 கிராம பஞ்சாயத்து தலைவர்கள், 1793 கிராம ஊராட்சிக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் கடந்த 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடந்தது. 12ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

புதிதாக தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள் பங்கேற்கும் முதல் கூட்டம் இன்று நடக்கிறது. இதில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள் 11 பேர், ஒன்றிய கவுன்சிலர்கள் 98 பேர், கிராம ஊராட்சித் தலைவர்கள் 274 பேர், கிராம ஊராட்சிக்குழு உறுப்பினர்கள் 1938 பேர் என மொத்தம் 2321 உள்ளாட்சி பிரதிநிதிகளாக பதவியேற்கின்றனர்.

இதை தொடர்ந்து நாளை மறுநாள் (22ம் தேதி) மாவட்ட ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர், துணைத் தலைவர், ஊராட்சி துணை தலைவர்களை தேர்ந்தெடுக்கும் மறைமுக தேர்தல் நடைபெற உள்ளது.

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில், புதிதாக தேர்வு செய்யப்பட்ட 3208 பேருக்கு இன்று பதவி பிரமாணம் நடக்கிறது. அந்தந்த பகுதிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள கூடுதல் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பதவி பிரமாணம் செய்து வைக்கின்றனர். பின்னர், தேர்வு செய்யப்பட்ட ஊராட்சி தலைவர்களுக்கான முதல் கூட்டம் நடக்கிறது. அதில் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான அறிவிப்பை மன்ற பொருளில் பதிவு செய்து தலைவர், வார்டு உறுப்பினர்கள் கையொப்பமிட்டு முதல் கூட்டம் நடத்தப்படுகிறது. தொடர்ந்து தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து கூட்டம் நிறைவடைகிறது.

Related Stories: