அக்டோபர் 1ம் தேதி முதல் 16 நாட்கள் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை: விமான எரிபொருளைவிட பெட்ரோல், டீசல் விலை 30% அதிகரிப்பு!!

சேலம்: பெட்ரோல், டீசல் விலை நடப்பு மாதத்தில் 16 நாட்கள் அதிகரித்துள்ளது. சர்வதேச சந்தையின் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை தினமும் எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு மாற்றி அமைத்து வருகிறது. நடப்பாண்டில் ஜனவரி மாதத்தில் இருந்து தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையை அதிகரித்து வருகின்றனர். இதனால், நாட்டின் பெரும்பாலான நகரங்களில் பெட்ரோல் ரூ.106க்கு அதிகமாகவும், டீசல் ரூ.100க்கு அதிகமாகவும் விற்பனையாகிறது. நடப்பு மாதத்தில் (அக்டோபர்) கடந்த 1ம் தேதியில் இருந்து இன்று வரையிலான 18 நாட்களில், 2 நாட்களை தவிர மற்ற 16 நாட்களும் விலையேற்றப்பட்டுள்ளது.

சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.103.01க்கு விற்கப்படுகிறது. டீசல் விலை ரூ.98.59ல் இருந்து ரூ.98.92க்கு விற்கப்படுகிறது. பெட்ரோல், டீசலின் தொடர் விலையேற்றத்தால், வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அத்தியாவசிய பொருட்களான காய்கறி, மளிகை பொருட்கள் விலை உயர்ந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த வேண்டும் என ஒன்றிய அரசை பொதுமக்களும், காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினரும் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த நிலையில், விமான எரிபொருளைவிட பெட்ரோல், டீசலின் விலை 30 சதவீதத்துக்கு மேல் அதிகரித்துள்ளது. டெல்லியில் விமானத்துக்கான எரிபொருள் ஒரு லிட்டா் ரூ.79 ஆக உள்ளது. ஆனால், பெட்ரோல், டீசல் விலை அதைவிட 30 சதவீதத்துக்கு மேல் அதிகமாக உள்ளது. இதன்மூலம் விமானத்தை இயக்குவதைவிட இருசக்கர வாகனத்தை இயக்குவதற்கான செலவு அதிகரித்துள்ளது.இந்தியாவிலேயே மிக அதிகமாக ராஜஸ்தான் மாநிலம் கங்கா நகரில் பெட்ரோல் ஒரு லிட்டா் ரூ.117.86 ஆகவும், டீசல் ஒரு லிட்டா் ரூ.105.95 ஆகவும் உள்ளது.

Related Stories: