பாலுக்கும் வந்தாச்சு ஏ.டி.எம்!

நன்றி குங்குமம் தோழி

நாட்டின் மூலைமுடுக்குகளில் எல்லாம் ஏடிஎம்கள் உள்ளன. நாம் வங்கி கணக்கில் வைத்திருக்கும் பணத்தை அதற்குரிய அட்டைகளை சொருகி இயந்திரங்களில இருந்து பணம் எடுத்துக்கொள்கிறோம். நினைக்கும் போது எல்லாம் பணத்தை வங்கியில் இருந்து எடுப்பது போல், தேவைப்படும் போது எல்லாம் பாலையும் இனி பெற்றுக் கொள்ளலாம்.

அசதியில் தூங்கி விட்டேன். பால்காரர் போயிட்டார். யாரை அனுப்பி பால் வாங்க சொல்வது. நண்பகல் ஆகிவிட்டதே பால் இருக்குமா தீர்ந்திருக்குமா இது போன்ற கவலை இனி இல்லை. ஆம், பணம் எடுப்பது போல் பாலையும் இனி  ஏ.டி.எம்மில் பெற்றுக் கொள்ளலாம், ஒடிசாவில். ஒடிசாவில் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து பால் ஏ.டி.எம் நடைமுறைக்கு வந்துள்ளது. கஞ்சம் மாவட்டத் தில் உள்ள பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த ஏ.டி.எம்களில் 500 லிட்டர் பாலை சேமித்து வைக்க முடியும். பதப்படுத்தப்பட்ட விட்டமின்கள் அடங்கிய இந்த பாலை பாத்திரங்கள் அல்லது பாட்டில்களை கொண்டு சென்றுதான் வாங்க முடியும். ஒரு லிட்டர் பால் ரூ.40க்கு விற்பனை செய்யப்படுகிறது. குறைந்தது 10 ரூபாய்க்கு 250 மிலி பாலை பெற்றுக்கொள்ளலாம்.

இதற்கான தொகையை ஏ.டி.எம் இயந்திரத்தில் போட்டு விட்டு அதில் உள்ள குழாய் முன் பாத்திரத்தை வைத்தால் நாம் போட்ட பணத்திற்கு ஏற்ற அளவு பால் நம்முடைய பாத்திரத்தில் நிரம்பிவிடும். முதல்முதலாக மகாராஷ்டிரா மாநிலத்தில் தான் இந்த பால் ஏ.டி.எம் அறிமுகம் செய்யப்பட்டது. அங்கு பால் பாக்கெட்கள் மற்றும் பாட்டில்களில் வழங்கப்படும் பாலுக்கு கூடுதலாக 50 காசு முதல் 2 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது. தற்போது ஒடிசாவில் திறக்கப்பட்டுள்ள பால் ஏ.டி.எம் பொதுமக்களிடையே நன்கு வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த ஏ.டி.எம்மை வரவேற்று கிரிஷ் பிரஜாபதி என்ற தினக்கூலி தொழிலாளி கூறியதாவது, ‘கூலி வேலைக்கு செல்லும் முன் பால் வாங்குவதற்காக பால் வியாபாரி வீட்டில் காத்திருக்க வேண்டும். சில சமயம் இரவு பணி முடிந்து திரும்பும் போது வாங்கலாம் என்று நினைத்தால் பால் இருக்காது, தீர்ந்து இருக்கும். குழந்தைக்கு பால் தரமுடியாமல் தவித்து இருக்கேன். இந்த பால் ஏ.டி.எம்கள் என் போன்ற தினக்கூலி தொழிலாளர்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கும்’’ என்றார்.

தொகுப்பு: கோமதி பாஸ்கரன்

Related Stories: