காதலை ஏற்காததால் ஆத்திரம்; குழவிக்கல்லை தலையில் போட்டு கல்லூரி மாணவி படுகொலை: நள்ளிரவில் வீடு புகுந்து வாலிபர் வெறிச்செயல்

முத்துப்பேட்டை: திருவாரூர் அருகே காதலை ஏற்காத கல்லூரி மாணவி தலையில் குழவிக்கல்லை போட்டு கொலை செய்த ஒருதலைகாதலன் கைது செய்யப்பட்டார். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்த பாண்டியன் மகள் மவுலிகா(18). இவர் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே பேட்டையில் உள்ள பாட்டி ராஜகுமாரி வீட்டில் தங்கி தஞ்சையில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தார். இவரது உறவினர் திருக்களார் கிராமத்தை சேர்ந்த பொதியப்பன் மகன் சிவசங்கரன்(28). தம்பிக்கோட்டை ஜாம்புவானோடை பகுதியில் உள்ள இறால் பண்ணையில் வேலை பார்த்து வருகிறார். இவர் மவுலிகாவை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.

இந்த காதலை மவுலிகா ஏற்கவில்லை. மேலும் இவருக்கு பெண் தருவதற்கு மவுலிகாவின் பெற்றோரும் மறுத்து வந்தனர். இதனால் ஆத்திரத்தில் இருந்த சிவசங்கரன், பேட்டையில் தங்கி படித்து வரும் மவுலிகா வீட்டுக்கு நேற்று இரவு 12 மணியளவில் சென்றார். கூரை வீடு என்பதால் கதவை உள்பக்கமாக பூட்டாமல் அனைவரும் தூங்கி கொண்டிருந்தனர்.  வீட்டுக்குள் நுழைந்து சிவசங்கரன் பார்த்தார். அப்போது மவுலிகா தூங்கி கொண்டிருந்தார். திடீரென வீட்டுக்குள்  இருந்த அம்மிக்கல் மேலிருந்த குழவிக்கல்லை தூக்கி தூங்கி கொண்டிருந்த மவுலியாவின் தலையில் சிவசங்கரன் போட்டு விட்டு தப்பியோடிவிட்டார்.  

படுகாயமடைந்த மவுலிகாவின் அலறல் சத்தம் கேட்டு பாட்டி ராஜகுமாரி எழுந்து பார்த்தார். மேலும் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களும் எழுந்து வந்து பார்த்தபோது ரத்த வெள்ளத்தில் மவுலிகா உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதையடுத்து மவுலிகாவை  சிகிச்சைக்காக முத்துப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்ததும் மேல்சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று காலை மவுலிகா இறந்தார். இதுகுறித்து முத்துப்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாணை நடத்தினர்.

இந்நிலையில் தப்பியோடி தம்பிக்கோட்டையில் தலைமறைவாக இருந்த சிவசங்கரனை பிடித்து போலீசில் பொதுமக்கள் ஒப்படைத்தனர். சிவசங்கரனை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி மாணவி கொலை சம்பவம் முத்துப்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்பாடுத்தியுள்ளது.

Related Stories: