மகாராஷ்ட்ராவை மிரட்டிய கனமழை: மழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 112 பேர் உயிரிழப்பு: மீட்புப்பணி தீவிரம்

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி 112 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்புபடை, ராணுவம் உள்ளிட்ட அமைப்புகள் தீவிர மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளன. தென்மேற்கு பருவமழை காரணமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த ஐந்து நாட்களுக்கும் மேலாக கனமழை கொட்டித்தீர்த்தது. அந்த மாநிலத்தில் உள்ள கோல்ஹாப்பூர், ராய்காட், சங்கிலி, ரத்னகிரி, சாதாரா, சிந்துதுர்க், மும்பை மற்றும் தானே மாவட்டங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள. 890 கிராமங்களும் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

மாகாத் அருகில் உள்ள தாலியே மலை கிராமத்தில் நிலச்சரிவு காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் உத்தவ் தாக்ரே நேரில் பார்வையிட்டார். இந்த மலைகிராமத்தில்தான் நிலச்சரிவில் சிக்கி 50க்கும் மேற்பட்டோர் உயிரோடு மண்ணில் புதைந்த சோகம் நேரிட்டது. இதனிடையே மகாராஷ்டிரா மாநில மீட்பு மற்றும் மறுவாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் , “மழை வெள்ளத்தில் சிக்கித் தவித்த 1.34 லட்சம் மக்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

மழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 112 ஆக அதிகரித்துள்ளது. மாடுகள், கோழிகள் உள்ளிட்ட 3221 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. 53 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். 99 பேர் காணாமல் போயிருக்கின்றனர்,” என்று கூறப்பட்டுள்ளது. தேசிய பேரிடர் மேலாண்மை மீட்புப்படையின் 149 குழுக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ராய்காட், ரத்னகிரி, சாதாரா மாவட்டங்களில் காணாமல் போனவர்களை தேடி வருகின்றனர்.  ராணுவமும் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளது. ஆபரேஷன் வர்ஷா என்ற பெயரில் ராணுவத்தின் மீட்புப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

அனுத் ராணுவ மையம், பாம்பே பொறியியல் குழு, புனே ஆகிய இடங்களில் வந்த 15 நிவாரண குழுக்கள் மீட்பு பணிகள் மற்றும் நிவாரண உதவிப் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றன. டேங்கர் லாரிகள் வாயிலாக பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கும் பணியிலும் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். ராணுவத்தின் மருத்துவர்கள், செவிலியர்களைக் கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ முகாம்களையும் ராணுவம் நடத்தி வருகிறது. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து மீட்கப்பட்ட மக்களுக்கு முதலுதவி சிகிச்சையுடன், மருந்துகளும் வழங்கப்படுகின்றன.

Related Stories: