சென்னை: முன்னாள் அதிமுக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் நேற்று விஜிலன்ஸ் சோதனை நடந்து கொண்டிருந்த நிலையில், சென்னையில் இபிஎஸ் - ஓபிஎஸ் தலைமையில் முன்னாள் அமைச்சர்கள் திடீர் ஆலோசனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் அமைச்சர்எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீடு, அலுவலகத்தில் நேற்று சோதனை நடந்து கொண்டிருந்த அதே நேரத்தில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் நேற்று மதியம் 12.45 மணிக்கு திடீரென கூடி ஆலோசனை நடத்தினர். இது பரபரப்பை ஏற்படுத்தியது. இக் கூட்டம் முடிந்ததும் ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் கூட்டாக அறிக்கை வெளியிட்டனர்.