மெக்கா, மதினா மசூதிகளின் பாதுகாப்பு பணிகளில் முதன்முறையாக பெண் ராணுவப்படையினர் : சவூதி இளவரசரின் அதிரடி!!

சவூதி : மெக்கா மற்றும் மதினா மசூதிகளின் பாதுகாப்பு பணிகளில் முதன்முறையாக பெண் ராணுவப்படையினரை சவூதி அரசு ஈடுபடுத்தியுள்ளது. சவூதி இளவரசர் முகமது பின் சல்மான் அந்நாட்டில் பெண்களுக்காக பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். பெண்களுக்கு கார் ஓட்ட அனுமதி, 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் தங்களின் பாதுகாவலர்கள் அனுமதி இல்லாமல் பயணம் செய்ய அனுமதி, சொத்துரிமையில் கூடுதல் கட்டுப்பாடு, ராணுவத்தில் பெண்கள் படை போன்றவற்றை அறிவித்தார்.

அதன் ஒரு பகுதியாக தற்போது சவூதி அரேபியாவில் உள்ள மெக்கா என்ற மசூதியில் பாதுகாப்பு பணியில் முதன்முறையாக பெண் ராணுவ வீரர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். சவூதி ராணுவத்தின் காக்கி நிற சீருடை பெண்களுக்கும் தரப்பட்டுள்ளது. முழங்கால் அளவிற்கு நீளமான மேல்சட்டையும் சற்றே தளர்வான கால் சட்டையுடன் கருப்பு வண்ணத்தில் தொப்பி மற்றும் முகத்தை மறைக்க துணி ஆகியவற்றை வீராங்கனைகள் அணிந்துள்ளனர். பழமைவாதம் வேரூண்டி இருக்கும் சவூதியில், இளவரசர் சல்மானின் அதிரடி நடவடிக்கைகள் பெண்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Related Stories: