15,000 பிரசவம் பார்த்த இந்திய டாக்டர்!

நன்றி குங்குமம் தோழி

வெயிலால் தகிக்கும் மணலில் நெடுந்தூர பயணம் சென்று, சாலை வசதியில்லாத கிராமங்களில் உள்ள வீடுகளில் பிரசவ வலியால் துடிக்கும் கர்ப்பிணிகளுக்கு பிரசவம் பார்க்கிறார். வீடு திரும்பும் வழியில் நோயால் தவிக்கும் ஆடுகளுக்கும் மருந்து மாத்திரை கொடுக்கிறார். பாம்பு கடித்ததால் உயிருக்கு போராடும் விவசாயி களுக்கும் ஊசி போடுகிறார். இப்படி பல நோய்களுக்கு சிகிச்சை அளித்ததன் மூலம் அம்மா என்று பிரியமாக அரபு மக்களால் அழைக்கப்படுகிறார் டாக்டர் சுலேகா.

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரை சேர்ந்தவர் சுலேகா. 80 வயதான சுலேகா தற்போது ஐக்கிய அரபு நாடுகளின் சார்ஜாவில் மருத்துவமனை ஒன்றை துவக்கி நடத்தி வருகிறார். சுலேகா தாவூத் என்பது அவரது முழுப்பெயர். அவரின் கணவர் இக்பால் கண் மருத்துவர். பணி நிமித்தமாக குவைத் சென்ற தம்பதி கடந்த 1964ம் ஆண்டில் சார்ஜாவுக்கு இடம் பெயர்ந்தனர்.

‘‘அந்த காலக்கட்டத்தில் அரபு நாடுகளில் சாலை வசதிகளே கிடையாது. எங்கள் மண் தான் நிரம்பி இருக்கும். மின்சார வசதியும் கிடையாது. அரபு ஷேக்குகள் கொஞ்சம் ஆச்சாரமானவர்கள். அவர்கள் பிரசவத்தை மருத்துவமனையில் பார்க்க விரும்ப மாட்டார்கள். வீட்டில்தான் பார்த்துக் கொள்வார்கள். மின்சார வசதி இல்லாத காரணத்தால் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் கூட பலருக்கு பிரசவம் பார்த்துள்ளேன். இதுவரை 15,000 பிரசவங்கள் பார்த்துள்ளதால் என்னை அரபு நாட்டினர் அம்மா என்றே அழைக்கின்றனர்.

துபாயில் பணியாற்றிய முதல் பெண் டாக்டர் என்பதில் எனக்கு மகிழ்ச்சி. அதிலும் பெரும்பாலும் ஆண் டாக்டர்களே பிரசவம் பார்த்து வரும் நிலையில் அரபு நாடுகளில் பெண் ஒருவர் பிரசவம் பார்க்கிறார் என்பதால் என்னை பலர் தேடி வந்து அழைத்து சென்றனர். இதனால் சாலை வசதி இல்லாத கிராமங்களுக்கு சென்று பிரசவம் பார்த்து வருகிறேன்.

பல இடங்களில் எக்ஸ்ரே வசதி இருக்காது. பெண் கர்ப்பிணியா என்பதை உறுதி செய்யும் சாதனம் கூட இருக்காது. இது தவிர சின்னம்மை, பெரியம்மை என பல நோயின் தாக்குதலும் அதிகமாக இருக்கும். அதற்கும் வைத்தியம் பார்த்து இருக்கேன். குவைத்தில் பணியாற்றிய முதல் பெண் டாக்டர் நான் என்பதால் எனக்கு இங்கு மிகுந்த வரவேற்பு உள்ளது.

அரேபியர்கள் விரும்பியதை தொடர்ந்து  சார்ஜாவில் தனியாக மருத்துவமனை தொடங்கி நடத்திவருகிறேன். குவைத்தில் இருந்தபோதே அரபி மொழியை கற்றுக்கொண்டதாலும் இஸ்லாமியர் என்பதாலும் அவர்களில் ஒருவராக என்னால் ஐக்கியமாக முடிந்தது. என் தந்தை அடிப்படை கல்வி கூட கற்காதவர். எனது தாய் 5ம் வகுப்பு வரை படித்தவர்.

எனது தாயின் ஆதரவால் தான் நான் மருத்துவத்தில் மேற்படிப்பு படித்து அரபு நாட்டில் சேவையாற்ற சென்றேன். மகப்பேறு மருத்துவ நிபுணரான நான் எந்த நோய்க்கும், ஏன் கால்நடைகளுக்கும் சிகிச்சை அளிக்க வேண்டிய நிலைக்கு அரேபியர்களின் அன்பால் அடிபணிந்தேன். இப்போது அவர்களில் ஒருவராக ஆகிவிட்டேன். எனது சேவையை பாராட்டி இந்திய அரசு ‘பிரவேசி பாரத் சம்மான்’ என்ற விருதை கடந்த ஜனவரியில் வழங்கியது’’ என்றார் புன்சிரிப்பு மாறாமல் டாக்டர் சுலேகா.

கோமதி பாஸ்கரன்

Related Stories: