சென்னை: தமிழகத்திற்கு இன்னும் 2 நாட்களில் 11.4 லட்சம் கோவிஷீல்டு, 1.6 லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகள் என மொத்தம் 13 லட்சம் தடுப்பூசிகள் வர உள்ளது. தமிழகத்தில் தற்போது 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் 18 முதல் 44 வயது உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான அனுமதி அளிக்கப்பட்டிருந்தாலும், தடுப்பூசி தட்டுபாடு காரணமாக அந்த திட்டம் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. தமிழகத்தில் விரைவில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி போடும் தொடங்கும் என எதிரிபார்க்கப்படுகிறது. தடுப்பூசிகளுக்கான கொள்கைகளை மாற்றி அமைக்க வேண்டும், உலகளாவிய அளவில் தடுப்பூசி வழங்களுக்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் ஏற்கனவே கடந்த 9ம் தேதி 3 லட்சம் தடுப்பூசி வந்த நிலையில் தடுப்பூசிகளுக்கான தேவை அதிகரித்து வருவதால் அடுத்த 2 நாட்களில் 13 லட்சம் தடுப்பூசிகள் தமிழகம் வரவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் ஏற்கனவே தமிழகத்திற்கு இதுவரை 82,31,720 தடுப்பூசிகள் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.