சென்னை: இஸ்லாமியர்கள் இன்று ரமலான் பண்டிகையை தங்கள் இல்லங்களிலேயே கொண்டாடிட வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர்
செஞ்சி கே.எஸ்.மஸ்தான் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:`இன்று ரமலான் பண்டிகையையொட்டி பள்ளிவாசல்களில் தொழுகை நடத்துவதற்கு அனுமதிக்க வேண்டும்’ என்று இஸ்லாமிய சமுதாயத்தின் சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை வந்திருக்கிறது. கொரோனா இரண்டாவது அலை மிக தீவிரமாக பரவி வருவதால் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, அந்த ஊரடங்கு கடந்த 10ம் தேதி முதல் வருகிற 24ம் தேதி வரை நடைமுறையில் இருந்து வருகிறது. அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்ய பல்வேறு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் `முழு ஊரடங்கை முழுமையாக கடைப்பிடிப்பீர்’ என்று ஏற்கனவே வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.