உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்: 17 மாதங்களுக்கு பின் பதவியேற்பு

நெல்லிக்குப்பம்: கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே கடலூர் ஒன்றியம் குமளங்குளம் ஊராட்சி மன்ற தலைவருக்கான தேர்தல் கடந்த 2019 டிசம்பர் மாதம் நடந்தது. இதில் ஜெயலட்சுமி என்பவர் ஆட்டோ சின்னத்தில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து விஜயலட்சுமி என்பவர் பூட்டு சாவி சின்னத்தில் போட்டியிட்டார். தேர்தல் முடிந்து கடந்த ஆண்டு ஜனவரி 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடந்தது. அப்போது, ஜெயலட்சுமி 2860 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட விஜயலட்சுமி 1179 வாக்குகள் பெற்றிருந்தார். வெற்றி பெற்றவர் ஜெயலட்சுமி என அறிவிப்பதற்கு பதிலாக தேர்தல் அதிகாரிகள் குழப்பத்தில் விஜயலட்சுமி வெற்றி பெற்றதாக அறிவித்து சான்றிதழ் வழங்கினர்.

இது தொடர்பான வழக்கை கடந்த ஏப்ரல் மாதம் 19ம் தேதி விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், மஞ்சுளா அடங்கிய அமர்வு, இரண்டு வாரங்களில் ஜெயலட்சுமி வெற்றி பெற்றதாக அறிவித்து, அவரது பதவியேற்புக்கான நடைமுறைகளை முடிக்க மாநில தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட்டனர். ஆனால் சட்டமன்ற தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் உள்ளதால் பதவி ஏற்பு விழா தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில், ஊராட்சி மன்ற தலைவராக ஜெயலட்சுமிக்கு நேற்று பதவி பிரமாணம் செய்து வைத்தனர். தேர்தலில் அதிக வாக்குகள் பெற்றும் 17 மாதங்களுக்கு பின் தலைவராக பதவி ஏற்றார் ஜெயலட்சுமி.

Related Stories: