சிறுமிக்கு பாலியல் தொல்லை முதியவருக்கு 10 ஆண்டு சிறை

துரைப்பாக்கம்: கானத்தூர் பகுதியை சேர்ந்தவர் மகபு ஜான்(60). அதே பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் செக்யூரிட்டியாக பணியாற்றி வந்தார். கடந்த 2014ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த சிறுமியிடம்  பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். இதுகுறித்து அச்சிறுமி, அழுதவாறு தன் பெற்றோரிடம் தெரிவித்தாள். இதனைக்கேட்டு, அதிர்ச்சியடைந்த அவர்கள் சம்பவம் குறித்து கானத்தூர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து மகபு ஜானை போக்சோவில் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

பின்னர், ஜாமீனில் அவர் வெளியே வந்தார். இதுதொடர்பான வழக்கு செங்கல்பட்டு போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் மீண்டும் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி வேல்முருகன், மகபு ஜான் மீதான குற்றம் நிருபிக்கப்பட்டதால் அவருக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ₹5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

Related Stories: