கேட்பதெல்லாம் மெய்யா?

நன்றி குங்குமம் தோழி

“மார்பகப் புற்றுநோய் குறித்து பெண்களிடையே தற்போது விழிப்புணர்வு ஏற்பட்டிருந்தாலும், அதைப்பற்றிய சில தவறான நம்பிக்கைகள், கற்பனையான கட்டுக்கதைகள், புனைவுகள் ஊடுருவி வருவதும் சகஜமான ஒன்றாக இருக்கிறது. சில பெண்கள் சிறு கட்டி இருந்தாலே பயப்படுவதும், வேறு சிலர் அதைப்பற்றி சிறிதும் அக்கறையில்லாமல் இருப்பதும் சற்று வேதனையளிக்கும் விஷயம்தான்” என்று சொல்லும் புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் ராஜாசுந்தரம், மார்பகப் புற்றுநோய் பற்றிய பெண்களின் சந்தேகங்களை தீர்க்கிறார்.

ஒருவரின் மார்பகத்தில் ஒரு கட்டி இருக்கிறது என்றால், அவருக்கு மார்பக புற்றுநோய் இருக்கிறது என்று அர்த்தமா?

ஒரு சிறு சதவீத அளவு மார்பக கட்டிகள் மட்டுமே புற்றுநோய்  கட்டிகளாக மாறுகின்றன. ஆனால் உங்கள் மார்பகத்தில் ஒரு கட்டி தொடர்ந்து இருப்பதையோ அல்லது மார்பக திசுவில் மாற்றங்கள் எதுவும் இருப்பதையோ நீங்கள் கண்டறிவீர்களானால்; அதை புறக்கணிக்கக்கூடாது. நீங்கள் ஒரு மருத்துவ மார்பக  பரிசோதனைக்கு  வருடாந்திர மார்பக ஊடுகதிர்ப்பட (மேமோகிராம்) சோதனைக்கு ஒரு மருத்துவரை பார்க்க வேண்டியது மிகவும் இன்றியமையாதது ஆகும்.

மார்பக புற்றுநோய் ஆண்களுக்கு வருவதில்லை; இது பெண்களை மட்டுமே பாதிக்கும் ஒரு நோயா?

ஒவ்வொரு ஆண்டும் ஏறக்குறைய 2,190 ஆண்கள் மார்பக புற்றுநோய் இருப்பதாக கண்டறியப்படுகின்றனர் மற்றும் அதில் 410 பேர் இறக்கின்றனர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஆண்களில் மார்பு புற்றுநோய், மார்பு காம்பின் கீழ் மற்றும் மார்பின் காம்பைச் சுற்றியுள்ள முகட்டு வட்டத்தில் ஒரு கடினமான கட்டியாக இருப்பது, பொதுவாக கண்டறியப்படுகிறது. முக்கியமாக ஆண்களில் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு மிகவும் குறைவு என்பதால், பெண்களைவிட ஆண்களில் இறப்பு விகிதம் அதிகமாக இருக்கிறது.

மார்பக ஊடுகதிர் பட சோதனை (Mammogram) மார்பக புற்றுநோய் பரவுவதற்கு வழிவகுக்குமா?

மார்பகத்தின் ஒரு முழு கள டிஜிட்டல் மேமோகிராம் பரிசோதனை என்பது, மார்பக புற்றுநோயை முன்னதாக கண்டறிவதற்கு ஒரு கோல்டன் ஸ்டாண்டர்டாக தற்போது இருக்கிறது. ஒரு மேமோகிராம் எடுக்கும்போது மார்பக அழுத்தம் உண்டாவது, புற்றுநோயை பரவச்செய்யாது. மேமோகிராமுக்கு மிகச்சிறிய அளவே கதிர்வீச்சு தேவைப்படுகிறது. இந்த கதிர்வீச்சு வெளிப்பாடினால் ஏற்படக்கூடிய ஆபத்து வாய்ப்பு மிகவும் குறைவாகும். பெண்களுக்கு 40 வயதில் தொடங்கி ஒவ்வொரு ஆண்டும் மேமோகிராம் பரிசோதனை செய்துகொள்வது பரிந்துரைக்கப்படுகிறது.

ஒருவரது குடும்ப பரம்பரையில் யாரேனும் ஒருவருக்கு மார்பக புற்றுநோய் இருந்திருக்குமானால், அவருக்கும் மார்பக புற்றுநோய் உருவாவதற்குரிய வாய்ப்பு உள்ளதா?

மார்பக புற்றுநோய் உடைய ஒரு குடும்ப வரலாறு இருக்கும் பெண்கள்,  மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான அதிக இடர் வாய்ப்பு பிரிவில் இருக்கின்றனர் என்றாலும், மார்பக புற்றுநோய் உள்ள அநேக பெண்களுக்கு அவர்களது குடும்பத்தில் புற்றுநோய் இருந்த வரலாறு இல்லை. புள்ளிவிவர ரீதியாக மார்பக புற்றுநோய் இருப்பதாக கண்டறியப்பட்ட நபர்களில் ஏறக்குறைய 5 சதவீத நோயாளிகளுக்கு மட்டுமே குடும்பத்தில் புற்றுநோய் இருந்த வரலாறு உள்ளது. மார்பக புற்றுநோய் இருந்த ஒரு முதல் டிகிரி உறவினர், இரண்டாம் டிகிரி உறவினர் அல்லது குடும்பத்தின் ஒரே தரப்பில் பல தலைமுறைகள் உங்களுக்கு இருப்பார்களானால், உங்களுக்கு மார்பக புற்றுநோய் வருவதற்கான இடர்வாய்ப்பு அதிகமாக இருக்கக்கூடும்.

* மார்பக புற்றுநோய் தொற்றக்கூடியது அல்ல.

* மரபணு மாற்றம் BRCA1 அல்லது BRCA2 ஒருவரது DNAவில் கண்டறியப்படுமானால், அவருக்கு நிச்சயமாக மார்பக புற்றுநோய் உருவாகக்கூடும்.

* BRCA1 அல்லது BRCA2-ஐ கொண்டிருப்பதாக அறியப்படும் குடும்பங்களைப் பொறுத்தவரை, அந்த குடும்பங்களிலுள்ள ஒவ்வொரு பெண்ணும் தீங்கு விளைவிக்கக்கூடிய BRCA 1 அல்லது BRCA 2 மரபணு பிறழ்வை தனது உடலில் கொண்டிருப்பதில்லை மற்றும் அந்த குடும்பங்களிலுள்ள ஒவ்வொரு புற்றுநோய் நேர்வும் இந்த மரபணுக்களில் ஒன்றில் உள்ள தீங்குவிளைவிக்கக்கூடிய மரபணு பிறழ்வுடன் தொடர்புடையதல்ல. மேலும், BRCA 1 அல்லது BRCA 2 மரபணு பிறழ்வுள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும் மார்பக மற்றும்  கருப்பைப்புற்றுநோய் உருவாவதில்லை. ஆனால், BRCA 1 அல்லது BRCA 2-ல் மரபு வழியில் மரபணு பிறழ்வுள்ள ஒரு பெண்ணுக்கு, அதுபோன்ற மரபணு பிறழ்வில்லாத ஒரு பெண்ணைவிட மார்பக புற்றுநோய் உருவாவதற்கு ஏறக்குறைய ஐந்து மடங்கு அதிக வாய்ப்புள்ளது.

* வியர்வை அடக்கிகள் (Antiperspirants) மற்றும் துர்நாற்றம் போக்கிகள் (Deodorants) மார்பக புற்றுநோயை விளைவிப்பதில்லை.

டீன்ஏஜ் வயதினர்களிடத்தில் இருக்கும் மார்பக புற்றுநோய் பற்றி...

பெண்கள் அவர்களுடைய பதின்ம வயதில் நுழையும்போது மார்பகங்கள் மாற்றமடைவது இயல்பாகும். ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்டிரோன் போன்ற பெண் ஹார்மோன்கள் அதிகரிப்பது அல்லது குறைவது  மார்பகங்களை மென்மையுறச் செய்யும். இது திசு தடிப்பதுபோல் உணரப்படக்கூடும் மற்றும் மாதவிடாய்களின்போது மார்பகங்களில் சில கட்டிகள் மற்றும் புடைப்புகளும்கூட உருவாகக்கூடும். பதின்ம வயதில் மிகவும் பொதுவாக வரக்கூடிய கட்டிகள்  Fibroadenomas மற்றும் நீர்க்கட்டிகள் (Cysts) ஆகும்.

14 வயது மற்றும் அதற்குட்பட்ட வயதுடைய இளம்பெண்களுக்கு மார்பக புற்றுநோய் உருவாவது என்பது பெரும்பாலும் கேள்விப்படாத ஒன்றாகும். பெண்கள் அவர்களுடைய பதின்ம வயதில் இருக்கும்போது மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் லேசாக அதிகரித்து வந்தாலும், அப்போதுகூட மிகவும் அரிதாகத்தான் இருக்கும். 10 லட்சம் டீன்ஏஜ் பெண்களில் ஒருவருக்கு மட்டுமே மார்பக புற்றுநோய் வருவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

ஆரம்பகால மார்பக புற்றுநோய்க்கான சிகிச்சை

ஒவ்வொரு மார்பக புற்றுநோயும், மார்பகத்திற்குள் (5 செ.மீக்கும் குறைவான) அடங்கியுள்ள ஊடுருவும் புற்றுநோய் ஆகும். மேலும், மார்பகத்தில் அல்லது அக்குளிலுள்ள நிணநீர் கணுக்களுக்கு இது பரவியிருக்கலாம் அல்லது பரவாமலும் இருக்கலாம். மார்பகத்தை அகற்றாமல் அப்படியே பராமரிப்பதை இலக்காகக்கொண்டு புற்றுநோய் கட்டியை மட்டும் நீக்குவதே, ஆரம்பகால மார்பக புற்றுநோய்க்கு சிகிச்சையளிப்பதன் நோக்கமாகும்.

ஆரம்பகால மார்பக புற்றுநோய்க்கான சிகிச்சையில் பின்வருவன உள்ளடங்கும்

* மார்பக அறுவைசிகிச்சை (Breast Surgery)

* வேதியியல் சிகிச்சை (Chemotherapy)

* கதிரியக்க சிகிச்சை (Radio Therapy)

* இலக்குடைய சிகிச்சை (Targeted Therapy)

* ஹார்மோன் சிகிச்சை (Hormone Therapy).

மார்பக அறுவைசிகிச்சை என்பது, மார்பகத்தை காப்பதாகவோ அல்லது ஒட்டுமொத்த மார்பகத்தையும் நீக்கி, அதையடுத்து மறுகட்டமைப்பு செய்யக்கூடியதாகவோ இருக்கலாம். மார்பக காப்பு அறுவை சிகிச்சையையடுத்து கதிரியக்க சிகிச்சை செய்வது என்பது, ஆரம்பகால மார்ப புற்றுநோய் உடைய பெரும்பாலான பெண்களுக்கு எவ்வளவு சீக்கிரத்தில் ஒட்டுமொத்த மார்பகத்தை அப்புறப்படுத்துவது என்பது நல்லதொரு பயனளிப்பதாக இருக்கும். அறுவைசிகிச்சையில், அக்குளிலுள்ள நிணநீர்க்கணுக்களை அப்புறப்படுத்துவதும் உள்ளடங்கும்.

அக்குளில் உண்டாகும் கணுக்களை ஒரு சென்டினல் நிணநீர் கணு உடல்திசு ஆய்வுசெய்து, கணு பாசிட்டிவ் ஆக இருந்தால் மட்டுமே ஒரு முழு அக்குள் பிளப்பாய்வு (Axillary dissection) செய்வது சமீபத்திய சிகிச்சை முன்னேற்றமாக இருக்கிறது. கீமோதெரபி சிகிச்சை முறை - ஆரம்பகால  மார்பக புற்றுநோய் உள்ள பெண்களுக்கு கீமோதெரபி  சிகிச்சையளிப்பது மார்பக புற்றுநோய் மீண்டும் வருவதற்கான அல்லது உடலின் இதர பாகங்களுக்கு பரவுவதற்கான ஆபத்தை குறைக்கக்கூடும். கீமோதெரபி சிகிச்சையானது, மார்பக புற்றுநோயிலிருந்து குணமடைந்து உயிர்பிழைப்பதற்குரிய வாய்ப்பையும் அதிகரிக்கக்கூடும்.

கீமோதெரபி சிகிச்சைக்கு பிறகு மட்டுமே இதர சிகிச்சை முறைகள் தொடங்கப்படுகின்றன. கதிரியக்க சிகிச்சைமுறை - பெரும்பாலும் ஆரம்பகால மார்பக புற்றுநோய் உள்ள பெண்களுக்கு, மார்பக பாதுகாப்பு அறுவை சிகிச்சைக்குப் பிறகு, கதிரியக்க சிகிச்சை எப்போதும் பரிந்துரைக்கப்படுகிறது. சில சமயங்களில், ஒட்டுமொத்த மார்பக நீக்க சிகிச்சைக்குப் பிறகு கதிரியக்க சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது.

ஹார்மோன் சிகிச்சைமுறை- தங்களுடைய மார்பக புற்றுநோய் செல்களில் ஹார்மோன் ரிசப்டர்கள் (ஹார்மோன் ஏற்பிகள்) (ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜஸ்டிரோன் ரிசப்டர்கள்) கொண்டுள்ள ஆரம்பகால மார்பக புற்றுநோய் உடைய பெண்களுக்கு சிகிச்சையளிப்பதற்கு மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. இவை தனியாகவோ அல்லது மற்ற மார்பக புற்றுநோய் சிகிச்சைகளுடனோ சேர்த்து பயன்படுத்தப்படலாம். ஒரு ஹார்மோன் சிகிச்சை முறையுடன் கூடிய ஒரு சிகிச்சைக்கு பரிந்துரைக்கலாமா மற்றும் எந்த ஹார்மோன் சார்ந்த சிகிச்சைக்கு பரிந்துரைக்கலாம் என்பது குறித்த முடிவு பின்வருவனவற்றை சார்ந்திருக்கும்:

* மார்பக புற்றுநோய் செல்களில் ஹார்மோன் ரிசப்டர்கள் உள்ளனவா

* அந்தப்பெண் மாதவிடாயின் இறுதி நிலையை (மெனோபாஸ்) அடைந்துவிட்டாரா?

ஹார்மோன் சிகிச்சைகள், மார்பக புற்றுநோய் (மார்பகங்களிலும் மற்றும் உடலின் மற்ற பாகங்களில்) மீண்டும் வரும் ஆபத்தை குறைக்கிறது. சில ஹார்மோன் சிகிச்சைகள் மார்பக புற்றுநோய் உள்ள பெண்களுக்கு குணமடைந்து உயிர்வாழும் வாய்ப்பை அதிகரிக்கச் செய்வதாகவும் அறியப்பட்டுள்ளது. இலக்குடைய சிகிச்சை (Targetted Therapy)  அல்லது உயிரியியல் சிகிச்சை குறிப்பிட்ட வகை புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை நிறுத்தக்கூடிய மருந்துகள் ஆகும். ஆரம்பகால மார்பக புற்றுநோய்க்கு சிகிச்சையளிப்பதற்கு மிகவும் பொதுவான பயன்படுத்தப்படும் இலக்குடைய சிகிச்சை Trastuzumab ஆகும். அதாவது HER 2 ரிசப்டர்களுக்கு எதிராக Herceptin மருந்து செலுத்துவது.

Related Stories: