நன்றி குங்குமம் தோழி
வீட்டு வாசலில் ஒவ்வொரு நாளும் சூரியன் உதிப்பதற்கு முன் சாணியை தெளித்து கோலம் போடுவது இன்றும் கிராமத்தில் வழக்கமாக உள்ளது. நகர வாழ்க்கையில் வாசலில் ஸ்டிக்கர் ஒட்டி விடுகிறோம். நம் பாரம்பரியம் மற்றும் கலாச்சாராத்தின் பிரதிபலிப்பு தான் ேகாலங்கள். மாக்கோலம், ரங்கோலி, புள்ளி கோலம்ன்னு நாம் விரும்பம் கோலங்களை போட்டுக் கொள்கிறோம். வாசலில் கோலம் போடுவதால் தினசரி நம் வீட்டிற்கு தேவர்கள் மற்றும் லட்சுமி தேவி வருவதாக ஐதீகம். அவர்களை வரவேற்கும் விதமாக கோலத்தை மங்கள சின்னமாக இன்றும் நடைமுறையில் இருந்து வருகிறது. வீட்டு வாசலை அலங்கரிக்கும் இந்த கோலங்களை எப்படி போடலாம்ன்னு சில குறிப்பு உங்களுக்காக...
* கலர்க்கோலம் போடும்போது கலருடன் சலித்த ஆற்று மணல், கோல மாவு கலந்து பிறகு வாசலில் கோலம் போட்டால், கலர்க்கோலம் பளிச்சென இருக்கும்.* மாக்கோலம் போடும் முன் அரைத்த மாவில் தனித்தனியே கலர் சேர்த்துக் கலந்து வைக்கலாம். மொசைக் தரையில் ேகாலம் போட்டாலும் பளிச்சென்று இருக்கும். * மாக்கோலம் போடும்போது துணியில் வைத்துக் கோல இழைப்போடுவது போல பஞ்சில், பிரஷ்ஷில் அல்லது ஸ்பான்ஞ்சில் நனைத்துப் போட்டால் பிசிறில்லாமல் அழகாக வரும்.* பூசணிப்பூ கிடைக்கவில்லை என்றால், இப்போது கிடைக்கும் வண்ண வண்ண பெங்களூர் ரோஜா பூக்களை அந்தந்த கிழமைக்கேற்ப நடுவில் வைத்தால் அழகாக இருக்கும்.* மார்கழி மாதம் அதிகாலையில் வாசலில் அகல் விளக்கை ஏற்றி வைத்துப் பின் கோலமிட, மார்கழி மாத பீடை அகலும்.* ரங்கோலி போடும்போது கையால் வட்டம், சதுரம் வரைய முடியாவிட்டால் பழைய கேஸ்கெட், ஃபைல் (file) பழசானது போன்றவற்றால் அவுட்லைனாக வரைந்து பின் கோலம் போட, அழகாக இருக்கும்.* காலை நேர பரபரப்பில் கோலம் பெரிதாக போட முடியாவிட்டாலும் விடுமுறை தினங்களில் கோலமிடும் போது அது ஒருமைப்பாட்டுக்கு உதவுவதோடு, கைகளுக்கும் பயிற்சியாக இருக்கும்.* ஸ்டென்சில் டிசைனை கொண்டு வரைந்து அதில் டிசைனுக்கு ஏற்ப கலர் கொடுத்து பார்டரை வெள்ளை நிற மாவால் அழகுப்படுத்தினால் கோலம் பார்க்க நன்றாக இருக்கும்.* கலர்க்கோலம் போட்டவுடன், பார்டர் கொடுத்துவிட்டு ஓரத்திலோ அல்லது நடுவிலோ அதன் மினியேச்சர் கோலம் ஒன்றையும் சின்னதாகப் போட, பார்க்கும் போது கண்களுக்கு ரம்மியமாக இருக்கும்.* கலர்க்கோலம் போடுவதற்கு முன் கோலமாவில் நிறங்களை கலப்பதற்கு பதில் ஃபுட் கலரை கலந்து கோலம் போட்டால் பார்க்க பளிச்சென்று இருப்பதோடு, சரும அலர்ஜியும் ஏற்படாது. * கோலம் போடும்முன் நகம், விரலில் வாசலைன் தடவிக் கொண்டால் கோலப் பவுடர் நக இடுக்குகளில் செல்லாது.
- மகாலெட்சுமி சுப்ரமணியன், காரைக்கால்.