மகாராஷ்டிரா சட்டமேலவை தேர்தலில் பாரதிய ஜனதா படுதோல்வி: 58 ஆண்டு கோட்டையான நாக்பூர் தகர்ந்தது

மும்பை: மகாராஷ்டிராவில் நடந்த சட்டமேலவை (எம்எல்சி) தேர்தலில் தனது 58 ஆண்டு கால கோட்டையாக இருந்த நாக்பூரில், பாஜ படுதோல்வியை சந்தித்தது.  மகாராஷ்டிராவில் சிவசேனா தலைவரும், முதல்வருமான உத்தவ் தாக்கரே  தலைமையிலான, ‘மகா விகாஸ் அகாடி கூட்டணி’ அரசு ஆட்சி செய்கிறது. இதில், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்நிலையில், இம்மாநிலத்தில் மொத்தமுள்ள 78 சட்டமேலவை  தொகுதிகளில் காலியாக இருந்த அவுரங்காபாத், புனே மற்றும் நாக்பூர் பட்டதாரி தொகுதிகளுக்கும், புனே, அமராவதி ஆசிரியர்கள் தொகுதிகளுக்கும் கடந்த 1ம் தேதி தேர்தல் நடந்தது. அதோடு, துலே நந்துபர் தொகுதியில் இடைத்தேர்தலும்  நடந்தது.  இதில், தேசியவாத காங்கிரசும், காங்கிரசும் தலா 2 தொகுதிகளிலும், சிவசேனா ஒரு தொகுதியிலும் போட்டியிட்டன. பாஜ 4 இடங்களில் போட்டியிட்டது. பாஜ ஆதரவுடன் ஒரு ெதாகுதியில் சுயேச்சை போட்டியிட்டார். இதில், 12  லட்சத்துக்கும் மேற்பட்ட பட்டதாரிகளும், ஆசிரியர்களும் வாக்களித்தனர். இதன் வாக்கு எண்ணிக்கை நேற்று முன்தினம் தொடங்கி நேற்று பிற்பகல் வரை நடைபெற்றது.

இதில், அவுரங்காபாத் மற்றும் புனே பட்டதாரி தொகுதிகளில் தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். அமரவாதியில் போட்டியிட்ட சிவசேனா, சுயேச்சை வேட்பாளரிடம் தோற்றது. புனே ஆசிரியர் தொகுதியில் காங்கிரஸ்  வெற்றி பெற்றது. அதேபோல்,  பாஜவின் 58 ஆண்டு கால கோட்டையாக கருதப்பட்ட நாக்பூர் தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. இங்கு போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் அபிஜித் வன்ஜாரி 61,701 வாக்குகளும், பாஜ வேட்பாளர் சந்திப்  ஜோஷி 42,791 வாக்குகளும் பெற்றனர். இத்தொகுதியை இழந்தது, பாஜ.வுக்கு பெரிய இழப்பாக கருதப்படுகிறது. இடைத்தேர்தல் நடைபெற்ற துலே நந்துபர் தொகுதியை மட்டும் பாஜ கைப்பற்றியது.

பாஜ. தப்பு கணக்கு

* பாஜ.வின் தோல்வி குறித்து முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்நவிஸ் கூறுகையில், ‘‘மகா  விகாஸ் அகாடி அரசின் வலிமையை கணிக்க தவறி விட்டோம். அடுத்த தேர்தலுக்கு  தயாராகி வருகிறோம் தோல்விக்கான காரணம் குறித்து  ஆய்வு செய்வோம்,’’ என்றார்.

* நாக்பூர் சட்டமேலவை தொகுதியில் இருந்து மத்திய  அமைச்சர் நிதின் கட்கரி பலமுறை எம்எல்சி.யாக  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

* இங்கு தோல்வியை தழுவிய பாஜ வேட்பாளர்  சந்திப் ஜோஷி, தற்போது நாக்பூர் மாநகர மேயராக பதவி வகித்து வருகிறார்.

* நாக்பூர் சட்டமேலவை தொகுதி, பாஜ  முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்நவிசின் சொந்த ஊர்.

Related Stories: