7 உட்பிரிவுகளை இணைத்து தேவேந்திர குல வேளாளர் என பொதுப் பெயர்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

சிவகங்கை: ஏழு உட்பிரிவுகளை உள்ளடக்கிய சாதிகளை தேவேந்திரகுல வேளாளர் என பொதுப்பெயரிட மத்திய அரசுக்கு, மாநில அரசு பரிந்துரைக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார். தேனி மாவட்டம், கூடலூர் அருகே லோயர்கேம்ப்  பகுதியிலிருந்து, மதுரை மாநகருக்கு ரூ.1,295.76 கோடி மதிப்பில் குடிநீர் கொண்டு வரும் கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு மதுரை கலெக்டர் அலுவலக வளாகத்தில் அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி  பங்கேற்று அடிக்கல் நாட்டினார். பின்னர் ரூ.33 கோடி மதிப்பில் கலெக்டர் அலுவலக புதிய கட்டிடத்தை திறந்தும், பணி நிறைவு பெற்ற 12 திட்டங்களையும் துவக்கி வைத்தார். பின்னர் முதல்வர் பேசியதாவது: தமிழகம் முழுவதும் இதுபோல் 76  கூட்டு குடிநீர் திட்டங்களை நிறைவேற்ற உள்ளோம். குடிநீர் பிரச்னைக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம்.

மேலும் ரூ.3,600 கோடி மதிப்பீட்டில் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் குழாய்கள் பதிக்கப்பட்டு, 40 லட்சம் குடிநீர் இணைப்புகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் இதுவரை 7 லட்சம் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் பேசினார். சிவகங்கை: சிவகங்கையில் நேற்று நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அவர் பேசியதாவது: ஏழு உட்பிரிவுகளை உள்ளடக்கிய சாதிகளை தேவேந்திரகுல வேளாளர் என  பொதுப்பெயரிட தொடர்ந்து பல கோரிக்கைகள் வந்தன. இதுகுறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவின் பரிந்துரையின்பேரில் மேற்கண்ட ஏழு உட்பிரிவுகளை கொண்ட சாதிகளை இனி தேவேந்திரகுல வேளாளர் என பொது  பெயரிட மத்திய அரசுக்கு, மாநில அரசு பரிந்துரைக்கும்.

தேவேந்திர குல வேளாளர் என பொது பெயரிட்டாலும் மேற்கண்ட ஏழு உட்பிரிவினரின் சமூக பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு இப்பிரிவினர் தொடர்ந்து பட்டியல் இனத்தில் இருக்கவும் குழு பரிந்துரைத்துள்ளது.

இவ்வாறு முதல்வர் பேசினார்.  பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘ரஜினிகாந்த் கட்சி தொடங்கி முதலில் அதை பதிவு செய்யட்டும். அதன் பிறகு அக்கட்சி குறித்து கருத்து தெரிவிக்கிறேன். துணைமுதல்வர் பன்னீர்செல்வம்,  ரஜினிகாந்த் கட்சி குறித்து தெரிவித்தது அவருடைய கருத்து’’ என்றார்.

Related Stories: