விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் திமுக முன்னணியினர் 2099 கி.மீ பயணம்: 41 தொகுதிகளில் 59,140 மக்களுடன் சந்திப்பு

சென்னை: தமிழகம் முழுவதும் மக்களை சந்தித்து வரும் திமுக முன்னணியினர் 11 நாட்களில் 2099 கி.மீ., பயணம் செய்து, 41 சட்டப்பேரவை தொகுதிகளில் 59,140 மக்களை நேரில் சந்தித்துள்ளதாக திமுக தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து, திமுக தலைமை கழகம் வெளியிட்ட அறிக்கை:  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியை தமிழகம் முழுவதும் கொண்டு சேர்க்கும் முயற்சியாக ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ என்ற பிரசார பயணத்தை, கடந்த  நவம்பர் 20ம் தேதி திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு  சென்னையில் அறிவித்தார். இதன்படி, திமுகவை சேர்ந்த 15 முன்னணியினர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தூதுவர்களாக 234 சட்டப்பேரவை தொகுதிகளிலும் 75 நாட்கள், 15  ஆயிரம் கி.மீ., பயணம் செய்து 1,500க்கும் மேற்பட்ட பொதுக்கூட்டங்களில் பங்கேற்று, 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களை நேரில் சந்தித்து உரையாடுவார்கள்.

திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கடந்த நவம்பர் 20ம் தேதி கலைஞர் பிறந்த ஊரான திருக்குவளையில் இருந்து பரப்புரை பயணத்தை  தொடங்கினார். அடுத்ததாக, திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி எம்பி, முதல்வர்  எடப்பாடி பழனிசாமியின் சொந்த தொகுதியில் பிரசாரத்தை தொடங்கி ஆயிரக்கணக்கான மக்களை சந்தித்து வருகிறார்.திமுக கொள்கை பரப்பு செயலாளர்கள் சபாபதி மோகன் காஞ்சிபுரம் மாவட்டத்திலும், திண்டுக்கல் ஐ.லியோனி   திருநெல்வேலி மாவட்டத்திலும் பிரசாரத்தை தொடங்கினர். சபாபதி மோகன் முதல் நாளில் 74 கி.மீ பயணித்து விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்ததோடு, பொதுமக்களுடன் சமபந்தி விருந்திலும் பங்கேற்றார். திண்டுக்கல் ஐ.லியோனி 90  கி.மீ., பயணித்து ஆயிரக்கணக்கான மக்களையும், கட்சி நிர்வாகிகளையும் சந்தித்து பேசி வருகிறார்.

துணை பொதுச்செயலாளர்கள் ஐ.பெரியசாமி திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியிலும், அந்தியூர் செல்வராஜ் அவிநாசி சட்டமன்ற தொகுதியிலும் பிரசாரத்தை தொடங்கினர். ஐ.பெரியசாமி 35 கி.மீ., பயணம் செய்து விவசாயிகளையும் மக்களையும்  சந்தித்து, குறைகளை கேட்டறிந்தார். அந்தியூர் செல்வராஜ் 75 கி.மீ., பயணித்து, அருந்ததியர் சமூக மக்களை சந்தித்து கோரிக்கைகளை கேட்டறிந்தார். தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன்  நேற்றைய முன்தினம்  சைதாப்பேட்டை பகுதியில் தனது பரப்புரையை தொடங்கி, ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் அப்பகுதிவாசிகளை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடினார்.

இதுவரை கடந்த 11 நாட்களில், ஏழு திமுக முன்னணியினர் 2099 கி.மீ., பயணம் மேற்கொண்டு, 15 திமுக மாவட்டங்களிலுள்ள 41 சட்டமன்ற தொகுதிகளில் 232 நிகழ்ச்சிகளில் பங்கேற்று 59,140 மக்களை நேரில் சந்தித்து, அவர்களது  கோரிக்கைகளை கேட்டறிந்துள்ளனர்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: