வாகன திருட்டு வழக்கில் 3 பேர் கைது: ரூ.18 லட்சம் மதிப்பிலான ஆட்டோ, பைக் பறிமுதல்

பெங்களூரு: பெங்களூருவில் வாகன திருட்டில் ஈடுபட்டு வந்த 3 பேரை கைது செய்த போலீசார் ரூ.18 லட்சம் மதிப்பிலான ஆட்டோ, பைக்குகளை பறிமுதல் செய்துள்ளனர். பெங்களூருவில் வீடுகள் மற்றும் சாலைகளின் ஓரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் ஆட்டோக்கள் மற்றும் பைக்குகளை மர்ம நபர்கள் திருடி வந்தனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் கொடுக்கும் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி பெங்களூரு மேற்கு மண்டலத்தில் நடந்த ஆட்டோ, பைக் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் உபகரணங்கள் திருட்டில் ஈடுபட்டு வந்தவர்களை தனிப்படை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று இந்த வழக்கு தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

விசாரணையில் கைதானவர்கள் கெங்கேரி ராமோஹள்ளியை சேர்ந்த சீனிவாசராஜ் (22), ராமோஹள்ளி முதலாவது கிராசை சேர்ந்த ஹேமந்த் (28, ராமோஹள்ளி தொட்டவீதியை சேர்ந்த என்.ராமு (26)என்று தெரியவந்தது. இவர்கள் பெங்களூரு மேற்கு மண்டலத்திற்குட்பட்ட போலீஸ் சரகத்தில், சாலையோரம் மற்றும் வீடுகளின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் ஆட்டோ, பைக் ஆகியவற்றின் லாக்குகளை உடைத்து, வாகனங்களை திருடி வந்தனர். இந்த வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளை மாற்றி, அவற்றை ஐதராபாத், தமிழகத்தில் விற்பனை செய்து வந்துள்ளனர். விசாரணையில் இவர்கள் கொடுத்த தகவலின் பேரில் ரூ.18.10 லட்சம் மதிப்பிலான 8 ஆட்டோ, 3 பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். கைதான 3 பேர் மீது கெங்கேரி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

Related Stories: