வாஷிங்டன்: கல்வான் பள்ளத்தாக்கு மோதல் சீனா அரசால் திட்டமிட்டு நடத்தப்பட்டதாக அமெரிக்கா குற்றம்சாட்டி உள்ளது. லடாக்கின் கிழக்கு பகுதியில் அத்துமீறிய சீன படையினருக்கும், இந்திய வீரர்களுக்கும் கடந்த ஜூன் மாதம் 15ம் தேதி மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய தரப்பில் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பில் 35 பேர் உயிர் இழந்தனர். இந்த மோதல் சீன அரசால் திட்டமிட்டு நடத்தப்பட்டது என அமெரிக்கா கூறி உள்ளது. அமெரிக்கா-சீனா பொருளாதார மற்றும் பாதுகாப்பு மறுஆய்வு ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘இந்தியா-சீனா இடையேயான எல்லைக்கட்டுப்பாடு கோடு பகுதியில் பல இடங்களில் மே மாதம் முதல் தொடர்ச்சியான மோதல்கள் நடந்து வருகிறது. ஜப்பான் முதல் இந்தியா வரையிலான நாடுகளுடன் ராணுவ அல்லது துணை ராணுவ மோதல்களைத் தூண்டி, அண்டை நாடுகளுக்கு எதிராக சீனா பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. ஜூன் மாதம் நடைபெற்ற கல்வான் சம்பவமும் சீன அரசாங்கம் திட்டமிட்டு செயல்படுத்தியது தான்’’ என அதில் கூறப்பட்டு உள்ளது.