கிச்சன் டிப்ஸ்

நன்றி குங்குமம் தோழி

* சில சமயம் சிப்ஸ் கட் செய்து எண்ணெயில் போட்டவுடன் பூரி போல் உப்பி கரகரப்பு தன்மையை இழக்கும். சிப்சுக்கு பூரி பலகையில்  இடும்போது மாவை ஆங்காங்கே முள் கரண்டியால் குத்தி விட பூரி போல் உப்பாது.

* வஜெிடபிள் பிரியாணி செய்யும்போது வேகவைத்த சோளம் சிறிது சேர்த்து செய்து பாருங்கள். பார்க்க முத்து முத்தாக அழகாக  இருப்பதுடன் சாதம் சுவை கூடும்.

- ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி.

*பாத்திரத்தில் மீன் மற்றும் பூண்டு வாசனை போகாவிட்டால் சீயக்காய் பொடி, புளி சேர்த்துப் பாத்திரங்களைத் தேய்த்துப் பின் கழுவி  வெயிலில் வைத்தால் வாடை போய் விடும்.

*கொள்ளுப் பருப்பை ஊறவைத்து அரைத்துப் பால் எடுத்து அதில் (தண்ணீருக்கு பதில்) சூப் வைத்தால் சுவையாக இருக்கும்.

 
- எஸ்.விஜயா சீனிவாசன், காட்டூர்.

*கடுகை வாணலியில் வறுத்து வைத்துக் கொண்டால் தாளிக்கும் போது வெடித்துச் சிதறாமல் இருக்கும்.

*ரசம் செய்யும்போது  சில முருங்கைப் பிஞ்சுகளைப் போட்டு கொதிக்க வைத்தால் புது வகையான மணம் மாறாமல் இருக்கும்.

சுவையும் கூடும்.

- ஆர்.மீனாட்சி, திருநெல்வேலி.

*ஆப்பிள் மிகவும் புளிப்பாக இருந்தால் தோல் சீவி நறுக்கி உப்பு, மிளகாய் பொடி, வெந்தய பொடி, பெருங்காய பொடி தாளித்துக்  கொட்டினால் புதுமையான ஊறுகாய்  ரெடி.

*வாழைப்பூ வடையை பொட்டுக்கடலை மாவில் செய்தால் சூப்பராக இருக்கும்.

*சாம்பார், ரசம் போன்றவைகளுக்கு பருப்பு வேகவைக்கும் போது துவரம்பருப்புடன் 2 டீஸ்பூன் பாசிப்பருப்பும், 1/2 டீஸ்பூன் வெந்தயமும்  சேர்த்து வேகவைத்தால் நன்கு குழைய வெந்து நிறைய இருப்பது போல் தெரியும். மேலும் சாம்பார், ரசம் சீக்கிரம் கெட்டுப் போகாது.

- வசந்தா மாரிமுத்து, சிட்லபாக்கம்.

*சோளே, சென்னா தயாரிக்கும்போது  அதில் நீர் பிரிந்து வராமல் இருக்க உருளைக்கிழங்கு வேகவைத்து மசித்து சேர்த்தால் தண்ணீர்  பிரிந்து வராது.

*குடைமிளகாய், கத்தரிக்காய், கோவைக்காய்களில் பொடியை அடைத்துக் கறி செய்யும்போது மசாலாப்பொடியுடன் 3 டீஸ்பூன்  பொட்டுக்கடலை மாவையும் கலந்து விட்டால் சுவையும் கூடும். மொறுமொறுப்பாகவும் இருக்கும்.

*அரிசி களைந்த நீர், பழைய சோற்று நீர் இவைகளில் துருப்பிடித்த கத்தி, அரிவாள், மணை போன்ற பொருட்களை 3 மணி நேரம்  ஊறவைத்து எடுத்து ஒரு துணியால் துடைத்தால் துரு போன இடம் தெரியாது.

- ஆர்.ராமலெட்சுமி, திருநெல்வேலி.

Related Stories: